போலீஸ் பிடியில் நடிகர் கிருஷ்ணா : சூடு பிடிக்கிறது கோகைன் வழக்கு
போலீஸ் பிடியில் நடிகர் கிருஷ்ணா : சூடு பிடிக்கிறது கோகைன் வழக்கு
UPDATED : ஜூன் 26, 2025 01:36 PM
ADDED : ஜூன் 25, 2025 11:43 PM

போதைப் பொருள் வழக்கில், நடிகர் ஸ்ரீகாந்த் கைதான நிலையில், தலைமறைவாக இருந்த மற்றொரு நடிகர் கிருஷ்ணாவும் இன்று (ஜூன்26) கைதானார். இவ்விவகாரத்தில், இரு நடிகையருக்கு எதிராகவும் விசாரணை துவங்கி இருப்பதால், 'கோகைன்' வழக்கு சூடு பிடித்துள்ளது.
கடந்த மாதம் 22ம் தேதி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள 'லார்டு ஆப் தி டிரிங்ஸ்' என்ற நவீன பாரில், இரு தரப்பினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியாக இருந்த பிரசாத், அக்கட்சியைச் சேர்ந்த அஜய் வாண்டையார் மற்றும் அவர்களது கூட்டாளிகள் அடிதடியில் ஈடுபட்டனர்.
நடிகர் பட்டாளம்
இந்த பிரச்னையை விசாரிக்கச் சென்ற சென்னை போலீசாருக்கு, சம்பந்தப்பட்ட நபர்கள் போதைப் பொருள் கடத்தல் மற்றும் போதைப் பொருள் பயன்படுத்தியது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் நாகேந்திர சேதுபதி, பிரசாத், அஜய் வாண்டையார், தனசேகரன் உள்ளிட்ட பலரை போலீசார் கைது செய்தனர். தொடர்ச்சியாக நடந்த விசாரணையில், இந்த விவகாரத்தில் பிரசாத்துடன், நடிகர் ஸ்ரீகாந்துக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.
சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர்களோடு தொடர்பில் இருந்த பிரசாத்தின் பிடியில், நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் மிகப்பெரிய நடிகர் - நடிகையர் பட்டாளமே சிக்கி உள்ளது. ரோஜா கூட்டம், பம்பரக் கண்ணாலே உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ஸ்ரீகாந்தை, தீங்கிரை என்ற படத்தில் நடிக்க வைக்க, பிரசாத் பேச்சு நடத்தியுள்ளார்.
அவருக்கு தர வேண்டிய சம்பள தொகைக்கு பதிலாக, கோகைன் போதைப் பொருள் கொடுத்து அடிமையாக்கி சீரழித்து உள்ளார்.குடும்ப பிரச்னை காரணமாக, கோகைன் போதைக்கு ஸ்ரீகாந்த் அடிமையாகி விட்டார்.
பிரசாத் வாயிலாக அறிமுகமான, கானா நாட்டைச் சேர்ந்த சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர் ஜான் மற்றும் சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப்குமார் ஆகியோரிடம், நேரடியாக கோகைன் வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
தொடர் விசாரணைக்குப் பின், நடிகர் ஸ்ரீகாந்தையும் போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீகாந்த் அளித்த வாக்கு மூலத்தில், பிரசாத், பிரதீப்குமார் மற்றும் ஜான் ஆகியோரிடம், கோகைன் வாங்கியதாகவும், கழுகு படத்தில் நடித்த நடிகர் கிருஷ்ணாவுக்கு கொடுத்ததாகவும் கூறினார்.
இதையடுத்து, இந்த வழக்கில் கிருஷ்ணாவும் சேர்க்கப்பட்டார். விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, சென்னை கலாஷேத்ரா காலனியில் உள்ள அவரது வீட்டுக்கு போலீசார் 'சம்மன்' அனுப்பினர். ஆனால், மொபைல் போனை 'ஆப்' செய்து விட்டு, கிருஷ்ணா தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்ய, சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில், ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விசாரணையில், அவர் பதுங்கி இருந்த இடத்திற்கு விரைந்து சென்று கிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர்.
கோகைன் பயன்படுத்தி வந்ததை, கிருஷ்ணா ஒப்புக் கொண்டுள்ளார்.
ஆதாரங்கள்
அவரது மொபைல் போன் உள்ளிட்ட 'டிஜிட்டல்' ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தன் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்த நடிகர், நடிகையர், இசையமைப்பாளர்கள் ஆகியோருக்கு, கிருஷ்ணா கோகைன் வாங்கி கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, ரசிகர்களை 'மச்சான்' என்று அழைக்கும் நடிகையையும், மற்றொரு முன்னணி நடிகையையும் போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
நடிகர் கிருஷ்ணா, தன்னிடம் கோகைன் போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தியவர்கள் யார் யார் என்ற தகவல்களை கூறியுள்ளதால், கோகைன் வழக்கு விசாரணை சூடு பிடித்துள்ளது.
போலீசார் கூறுகையில், 'கிருஷ்ணாவுக்கும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆதாரங்கள் அடிப்படையில் அடுத்தடுத்த நபர்களிடம் விசாரிக்க உள்ளோம். இதில் நடிகர்- - நடிகையரும் உள்ளனர்' என்றனர்.
- நமது நிருபர் -