வழிப்பறி வழக்கில் தலைமறைவான சிறப்பு எஸ்.ஐ., டேராடூனில் கைது
வழிப்பறி வழக்கில் தலைமறைவான சிறப்பு எஸ்.ஐ., டேராடூனில் கைது
ADDED : ஜன 16, 2025 12:26 AM

சென்னை : சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.,யாக பணிபுரிந்தவர் ராஜா சிங், 48. அதேபோல, சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.,யாக பணிபுரிந்தவர் சன்னி லாய்டு, 48; இருவரும் நண்பர்கள்.
இவர்கள் வெளிநாடுகளில் இருந்து, தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வரும் நபர்களை குறி வைத்து, அவர்களிடம் மாமூல் வசூலித்து வந்தனர்.
அத்துடன், ஹவாலா பணப்பரிமாற்ற கும்பல் குறித்தும் துப்பு துலக்கி, அவர்களிடம் வழிப்பறி செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு துணையாக வருமான வரித்துறை அதிகாரிகள் சிலர் செயல்பட்டனர்.
கடந்த டிச., 16ம் தேதி இரவு, திருப்பத்துார் மாவட்டத்தில் இருந்து, சி.டி., ஸ்கேன் இயந்திரம் வாங்கிக் கொண்டு, 20 லட்சம் ரூபாயுடன் வந்த முகமது கவுஸ் என்பவரை, திருவல்லிக்கேணி ஓமந்துாரார் மருத்துவமனை அருகே ராஜா சிங் தடுத்து நிறுத்தினார்.
ஹவாலா பணம் எனக்கூறி வழிப்பறி செய்ய, தன் நண்பர் சன்னி லாய்டுக்கு தகவல் தெரிவித்தார். இருவரும் சேர்ந்து, தங்கள் கூட்டாளிகளான வருமான வரித்துறை கண்காணிப்பாளர் பிரபு, 31, ஆய்வாளர் தாமோதரன், 41, ஊழியர் பிரதீப், 42, ஆகியோரை சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர்.
முகமது கவுசை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்வது போல காரில் கடத்தி சென்று, 20 லட்சம் ரூபாயை பறித்துக் கொண்டு, அவரை விரட்டி விட்டனர்.
இதுகுறித்து, திருவல்லிக்கேணி போலீசில் அவர் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜா சிங், பிரபு, தாமோதரன், பிரதீப் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சன்னி லாய்டு தலைமறைவானார். அவரை பிடிக்க, இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் பதுங்கி இருந்த சன்னி லாய்டை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.