நடிகை மரண வழக்கில் விடுதலை கணவர் பதில் அளிக்க உத்தரவு
நடிகை மரண வழக்கில் விடுதலை கணவர் பதில் அளிக்க உத்தரவு
ADDED : அக் 15, 2024 06:30 AM
சென்னை : சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கில் அவரது கணவர் விடுதலையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், 'அப்பீல்' செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்க,ஹேம்நாத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
'டிவி' தொடர்களில் நடித்து வந்தவர் சித்ரா; திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில், சடலமாக மீட்கப்பட்டார்.
கடந்த 2020 டிசம்பரில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக, சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வழக்கை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் விசாரித்தது. குற்றம் சாட்டப்பட்டிருந்த ஹேம்நாத்தை விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், சித்ராவின் தந்தை காமராஜ் மேல்முறையீடு செய்தார்.
மனுவில், 'மன உளைச்சல், சித்ரவதை செய்ததால் தான், சித்ரா தற்கொலை செய்ததாக, முக்கிய சாட்சி வாக்குமூலம் அளித்துள்ளார். சிலரது சாட்சியங்களை, மகளிர் நீதிமன்றம் முறையாக பரிசீலிக்கவில்லை.
சித்ராவை துன்புறுத்தி, தற்கொலைக்கு ஹேம்நாத் துாண்டியுள்ளார். எனவே, திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார்.
மேல்முறையீட்டு மனு, நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் டி.செல்வம் ஆஜரானார். மனுவுக்கு பதில் அளிக்க ஹேம்நாத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த மாதம் 5ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

