மத மோதல்களை உருவாக்குவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை: உயர்நீதிமன்ற கிளை
மத மோதல்களை உருவாக்குவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை: உயர்நீதிமன்ற கிளை
ADDED : ஜூலை 03, 2024 01:08 PM
மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த அகமத் பயாஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ராமநாதபுரம் மாவட்டம் நம்புதலையைச் சேர்ந்த குருஜி என்பவர், இந்து முஸ்லிம் இடையே பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிடுகிறார். மதக்கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வருகிறார். நடவடிக்கை கோரி தொண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றவும் உத்தரவிட வேண்டும் எனக்கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, ‛‛ எவ்வாறு இதுபோன்ற பதிவுகள் பதிவிடப்படுகிறது. மோசமான , பார்க்கவே சகிக்க முடியாத பதிவுகளை பதிவிட்டு வருகிறார். அவர் மீது வழக்கு பதிவு செய்ய இவ்வளவு தாமதம் ஏன்? இதுபோன்ற குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், போலீசார், அதற்கு நேர்மாறாக குண்டர் சட்டங்களை பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இந்த வழக்கை வேறு விசாரணை பிரிவுக்கு ஏன் மாற்றக்கூடாது? ராமநாதபுர மாவட்ட எஸ்பி இந்த வழக்கு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதுபோன்று மத மோதல்களை உருவாக்கும் நபர்களை விசாரணை செய்ய வேறு ஏதேனும் பிரிவு உள்ளதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.