'கருக்கலைப்பு மாத்திரை விற்றால் மருந்தகங்கள் மீது நடவடிக்கை'
'கருக்கலைப்பு மாத்திரை விற்றால் மருந்தகங்கள் மீது நடவடிக்கை'
ADDED : டிச 22, 2024 09:00 AM
கோவை: கருக்கலைப்புகளில் ஏற்படும் இறப்புகளை தவிர்க்க, தமிழக அரசு மேற்கொண்டுள்ள விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக, கோவை குடும்ப நலத்துறை மருந்து கட்டுப்பாட்டுத்துறை சார்பில், மருந்தாளுனர்களுக்கு, நரசிம்மநாயக்கன்பாளையத்தில், விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
அதில், 'டாக்டர்களின் பரிந்துரையின்றி கருக்கலைப்பு மாத்திரைகளை விற்கக் கூடாது. அவ்வாறு விற்பனை செய்யும் மருந்து கடைகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசாணையை மீறி, கருக்கலைப்பு மாத்திரை விற்பனை செய்யும் மருந்தகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும். கடை உரிமையாளர் மீது, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும்' என அறிவுறுத்தப்பட்டது.
அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கருக்கலைப்பு செய்யப்படுகிறது. இச்சேவையை ஏற்றுக்கொள்ளும் பெண்களின் விபரம், ரகசியம் பாதுகாக்கப்படும்.
கருக்கலைப்பு மாத்திரைகளை டாக்டரின் பரிந்துரையின்றி எடுத்துக் கொள்வதால், கர்ப்பிணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே, மருத்துவமனைகள் மூலமாக கருக்கலைப்பு செய்ய வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டது.
கருத்தரங்கில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் (குடும்ப நலம்) துணை இயக்குனர் கவுரி, மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குனர் மாரிமுத்து, இந்திய மருத்துவ சங்க செயலாளர் சீதாராம் ஆகியோர் பேசினர்.
மருந்துகள் ஆய்வாளர்கள் பாலாஜி, திலகவதி, நந்தினி, மாவட்ட விரிவாக்க கல்வியாளர்கள் ராணி, சார்லஸ் ராஜன், மாவட்ட புள்ளிவிபர உதவியாளர் பிரபாகர், கோவை மாவட்ட மருந்து வணிகர் சங்கத்தினர் பங்கேற்றனர்.