ADDED : ஜூலை 17, 2025 12:38 AM

சென்னை:ஒப்பந்தத்தின்படி படப்பிடிப்பை துவக்காததால் ஏற்பட்ட இழப்புக்கு, 9 கோடி ரூபாய் வழங்க உத்தரவிட கோரி, நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்த மனுவுக்கு, தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரவி மோகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
கோவையை சேர்ந்த, 'பாபி டச் கோல்ட் யுனிவர்சல்' என்ற நிறுவனத்துடன், இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஒப்பந்தப்படி, தயாரிப்பு நிறுவனம் படப்பிடிப்பை துவக்காததால், என்னால் வேறு படங்களில் நடிக்க முடியவில்லை. ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது. எனவே, படத்தில் இருந்து விலகினேன்.
இதுகுறித்து, பட தயாரிப்பாளருக்கு தகவல் தெரிவித்தேன். முன்பணமாக தந்த 6 கோடி ரூபாயை திருப்பித் தரும்படி, நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த இடைப்பட்ட காலத்தில், பாபி டச் கோல்ட் தயாரித்துள்ள, சென்னை சிட்டி கேங்ஸ்டர் என்ற படத்தையும், தயாரிக்கும் வேறு படங்களையும் விற்க, வெளியிட தடை விதிக்க வேண்டும். மேலும், எனக்கு ஏற்பட்ட இழப்புக்கு 9 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, நீதிபதி அப்துல் குத்துாஸ் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நடிகர் ரவி மோகன் தரப்பில் வழக்கறிஞர் கார்த்திகைபாலன் ஆஜராகி, ''முன்பணத்தை திருப்பிக் கொடுக்க, மனுதாரர் தயாராக உள்ளார்.
''அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட பின், முன்பணமாக பெற்ற தொகையை கொடுப்பதாக கூறியும், ஏழு நாட்களில் பணத்தை திருப்பித் தர கேட்கின்றனர்,'' என்றார்.
தயாரிப்பு நிறுவனம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. ஒப்பந்தத்தை மீறி, பராசக்தி என்ற படத்தில் மனுதாரர் நடித்து உள்ளார்,'' என்றார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த மனுவுக்கு பதிலளிக்க, தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.