தி.மு.க., - பா.ஜ., ரகசிய உறவு உடைக்கிறார் நடிகர் விஜய்
தி.மு.க., - பா.ஜ., ரகசிய உறவு உடைக்கிறார் நடிகர் விஜய்
ADDED : பிப் 26, 2025 08:08 PM

மாமல்லபுரம்: ''அரசியல் பதவிகளால் பண்ணையாராக மாறியவர்களை, அரசியலிருந்தே விரட்ட வேண்டும்,'' என, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆவேசப்பட்டார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா, மாமல்லபுரம் தனியார் அரங்கில் நடந்தது. 'கெட் - அவுட்' என்ற கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து, அக்கட்சி தலைவர் விஜய் பேசியதாவது:
அரசியலில் நிரந்தர நண்பனோ, எதிரியோ இல்லை என்பதை கேள்விப்பட்டுள்ளோம். அரசியலுக்கு யாரும் வரலாம்; அது ஜனநாயக உரிமை. மக்கள் விரும்பும் ஒருவன் அரசியலுக்கு வந்தால், நல்ல முறையில் தான் வரவேற்பர்.
ஒரு சிலருக்கு எரிச்சல் வரும். நாம் சொன்ன பொய்யை நம்பி, மக்கள் ஓட்டு போட்டார்களே. ஆனால், இவன் சொல்வது மக்களுக்கு நெருக்கமாக உள்ளதே என்று குழப்பம் ஏற்படும். வர்றவன், போறவன் எல்லாம் கட்சி ஆரம்பிக்கிறானே என்றும் பேசுவர். ஆட்சியில் உள்ளவர்கள் அப்படித்தான் பேசுவர்.
இப்படிப்பட்ட அரசியல் களத்துல பயம், பதற்றம் இல்லாமல், எதிர்ப்பை இடது கையால் புறந்தள்ளி, த.வெ.க.,வின் இரண்டாம் ஆண்டு துவங்கி உள்ளது. அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., கட்சி துவங்கியபோது, இளைஞர்கள் தான் அவர்களுடன் இருந்தனர். அதனால் தான் அவர்களுக்கு, 1967, 1977 தேர்தல்களில் வெற்றி கிடைத்தது.
த.வெ.க., எளிமையான மக்கள் கட்சி. நிர்வாகிகளும் அப்படித் தான் இருப்பர். இது பண்ணையார் கட்சியல்ல. முற்காலத்துல பண்ணையார்கள் கட்சியில் இருப்பர். இப்ப பதவிகளில் உள்ளோர் பண்ணையாராக மாறி விடுகின்றனர்.
மக்கள், நாட்டு நலன் வளர்ச்சி பற்றி கவலைப்படாமல், பணம் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் செயல்படும் பண்ணையார்களை, அரசியலிலிருந்தே அகற்ற வேண்டும். அதை ஜனநாயக ரீதியில் அணுகவே, 2026 தேர்தலை சந்திக்கிறோம். எந்தக் கட்சிக்கும் த.வெ.க., சளைத்ததல்ல.
இப்போது, மும்மொழி கொள்கை பிரச்னை எழுந்துள்ளது. இதை அமல்படுத்தாவிட்டால், மத்திய அரசு, மாநில அரசிற்கு கல்வி நிதி அளிக்காதாம். நிதி அளிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. பெற வேண்டியது மாநில அரசின் உரிமை.
பா.ஜ., - தி.மு.க.,வைச் சேர்ந்தோர், தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு, 'டிராமா' போட்டு, மக்களை ஏமாற்றுகின்றனர். பா.ஜ.,வினர் அடிக்கிற மாதிரி அடிப்பராம்; தி.மு.க., அழுகிற மாதிரி அழுமாம். அதை நாட்டு மக்கள் நம்பணுமாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழா நடந்த இடத்தில், புதிய கல்வி கொள்கை உள்ளிட்ட அவலங்களை, 'கெட் அவுட்' செய்ய உறுதியேற்போம் என்ற வாசகத்துடன் அமைந்த பதாகையில், விஜய் கையொப்பமிட்டு, கையெழுத்து இயக்கம் துவங்கினார்.
ஹிந்திக்கு எதிரான விஷயம் என்பதால், வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பதாகையில் கையொப்பமிடாமல் ஒதுங்கினார்.
கட்சியை நடத்துவது யார்?
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரஷாந்த் கிஷோர், த.வெ.க.,வுக்கு அடுத்த மூன்று மாதங்களில், ஒவ்வொரு தொண்டரும் தலா 10 பேரை சேர்க்க வேண்டும் என, உத்தரவிட்டார். இது கட்சியை நடத்துவது விஜய்யா அல்லது பிரஷாந்த் கிஷோரா என்ற கேள்வியை எழுப்புகிறது.
நிகழ்ச்சியில் பிரஷாந்த் கிஷோர் பேசுகையில், ''கிரிக்கெட் வீரர் தோனி, தமிழகத்தில் மிகவும் பிரபலமானவார். அடுத்தாண்டு எனது பங்களிப்புடன், த.வெ.க., வெற்றி பெற்றால், தோனியை விட தமிழகத்தில் நான் பிரபலமாகி விடுவேன். தமிழகத்தில் ஊழல், வகுப்புவாதம், குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும். அதற்கு த.வெ.க.,வின் ஒவ்வொரு நிர்வாகியும், தொண்டர்களும், அடுத்த மூன்று மாதங்களில் 10 பேரை, கட்சியில் சேர்க்க வேண்டும்,'' என்றார்.
உள்ளூரிலேயே விலை போகாதவர்!
'நடிகர் விஜய் கட்சியின் இரண்டாம்
ஆண்டு தொடக்க விழாவில், பிரசாந்த் கிஷோர் பேசப் போகிறார்' என்று. அவரைப்
பற்றி சொல்ல வேண்டும் என்றால், உள்ளூரிலேயே விலை போகாதவர் பிரஷாந்த் கிஷோர்
என சொன்னார்கள்.
தனி இயக்கம் கண்டு, பீஹாரில் தேர்தலில் தனித்து
போட்டியிட்டார். போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டிபாசிட் பறிபோனது.
அப்படிப்பட்டவர்தான், தமிழ்கம் வந்து, இங்கிருப்போருக்கு அரசியல் வியூகம்
வகுத்துக் கொடுக்கிறார். அதை வைத்து வெற்றி பெற முடியுமா?
ஏற்கனவே,
தி.மு.க.,வுக்காக பணியாற்றினார். வியூகமெல்லாம் வகுத்துக் கொடுத்தார்;
ஆனால், தி.மு.க., சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது.
தொடர்ந்து தி.மு.க.,வுக்காக பணியாற்ற வாய்ப்பில்லாததால், மாற்று கட்சிக்காக
பணியாற்ற சென்று விட்டார்.
யாரை எப்படி எதிர்கொள்வது என்பது,
தமிழக முதல்வருக்கு தெரியும். தி.மு.க.,வை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்
செல்ல, எங்களுக்கு அவர் ஒருவர் போதும்.
நேரு, தமிழக அமைச்சர்