விஜய் கட்சி மாநாட்டுக்கு விக்கிரவாண்டி தயாராகிறது; செப்.,23ல் நடத்த ஏற்பாடு தீவிரம்!
விஜய் கட்சி மாநாட்டுக்கு விக்கிரவாண்டி தயாராகிறது; செப்.,23ல் நடத்த ஏற்பாடு தீவிரம்!
ADDED : ஆக 28, 2024 01:50 PM

விழுப்புரம்: செப்டம்பர் 23ம் தேதி கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடிகர் விஜய் நடத்தப்போவது உறுதியாகி உள்ள நிலையில் கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள் மாநாட்டு வேலைகளில் தீவிரமாகியுள்ளனர்.
ஆரம்பம்
கட்சி ஆரம்பிப்பேன், தேர்தலில் போட்டியிடுவேன் என்று யார் யாரோ கூறியது நடக்காது போனாலும், 'அரசியலுக்கு நிச்சயம் வருவேன்' என்று கூறி அதை செய்தும் காட்டி உள்ளார் நடிகர் விஜய். தனது கட்சிக்கு தமிழக வெற்றிக்கழகம் என்று பெயர் வைத்து வரும் 2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதாகவும் அறிவித்துவிட்டார்.அவசியம்
கட்சி பெயர் அறிவிச்சாச்சு, கொடியையும் அறிமுகப்படுத்தியாச்சு, கட்சி பாடலையும் வெளியிட்டாச்சு. கொடி விளக்கம், கட்சியின் கொள்கை உள்ளிட்ட மற்ற நோக்கங்களை அறிவிக்க மாநாடு அவசியம் என்பதால் அதற்கான பரபர வேலைகளில் நடிகர் விஜய் இறங்கி வருகிறார். அதற்குள் அவர் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார், யார் சொல்லி கட்சியை ஆரம்பித்து இருக்கிறார், சீமானுடன் கூட்டணி என்று பலர் ஹேஷ்யங்களை கூறி வருகின்றனர்.ஏதேனும் ஒரு இடம்
இத்தகைய சூழ்நிலையில், திருச்சி, சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் மாநாடு நடத்த இடம் தேர்வு செய்ய விஜய் உத்தரவிட்டு இருந்ததாக கூறப்பட்டது. அங்கு இடம் அமையாத நிலையில், விக்கிரவாண்டி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தற்போது செப்டம்பர் 23ம் தேதி கட்சியின் முதல் மாநாடு என்பது அதிகாரப்பூர்வமாக தெரிந்துவிட்டது. மாநாடு விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடக்கிறது. முதல் மாநாடு; அனைத்தையும் கனகச்சிதமாக, எவ்வித சிக்கலும் இல்லாமல் செய்து முடிக்க வேண்டும் என்பதால் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட பலரும் அதீத கவனத்துடன் செயல்படுகின்றனர்.
எஸ்.பி.யிடம் மனு
மாநாட்டுக்கு அனுமதி கோரி, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் முதல் நடவடிக்கையாக முறைப்படி மனு ஒன்றை புஸ்சி ஆனந்த் அளித்துள்ளார். அவர் மனு கொடுக்கச் சென்ற போது எஸ்.பி., அங்கு இல்லை. இதனால் ஏ.டி.எஸ்.பி., திருமாலிடம் மனு அளித்துள்ளார்.
85 ஏக்கர்
மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது; செப்டம்பர் 23ம் தேதி வி. சாலையில் உள்ள கிராமத்தில் மாநாடு நடத்த அனுமதியும், பாதுகாப்பும் வேண்டும். 85 ஏக்கரில் மாநாடு நடத்துவதற்கான இடமும், வலது,இடது புறங்களில் வாகனங்களில் நிறுத்துவதற்கான இடமும் வாடகைக்கு எடுக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. எனவே முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆலோசனைகள்
மாநாட்டுக்கான ஏற்பாடுகள் என்பது தற்போது விறுவிறுவென தொடங்கி உள்ளதால் கட்சி நிர்வாகிகள் சுறுசுறுப்பாகி உள்ளனர். மாவட்டம்தோறும் எத்தனை பேரை அழைத்து வருவது, எத்தனை வாகனங்கள், அனைத்து மாவட்ட நிர்வாகிகள், ஆதரவாளர்களை ஒருங்கிணைப்பது என ஆலோசனைகளை முழு வீச்சில் ஆரம்பித்துள்ளனர்.