நடிகரின் முதல்வர் 'கனவு' பலிக்காது: பொள்ளாச்சி ஜெயராமன் காட்டம்
நடிகரின் முதல்வர் 'கனவு' பலிக்காது: பொள்ளாச்சி ஜெயராமன் காட்டம்
ADDED : ஆக 25, 2025 01:07 AM

திருப்பூர்: ''நடிகரின் முதல்வர் 'கனவு' பலிக்காது'' என்று அ.தி.மு.க., தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.
திருப்பூரில் அ.தி.மு.க., சார்பில் நடந்த தெருமுனை பிரசாரத்தில், ஜெயராமன் பேசியதாவது:
எவ்வளவோ நடிகர்கள் கட்சி ஆரம்பித்தனர். பாக்யராஜ், சிவாஜி காணாமல் போயினர். எம்.ஜி.ஆர்., மக்கள் மனதில் என்றும் வாழ்கிறார்.
இப்போது ஒரு நடிகர், நேராக சட்டமன்ற தேர்தலில் நிற்பாராம்; கோட்டைக்கு போவாராம்; கோட்டையின் கதவை இவருக்காக மக்கள் திறந்து வைத்து இருப்பார்களாம்; என்ன கனவு பாருங்கள். எங்களை விமர்சனம் செய்தால் அவருக்கு தேய்பிறைதான். அவரது முதல்வர் 'கனவு' பலிக்காது.
எம்.ஜி.ஆர்., மக்களுக்காக வாழ்ந்தார். அவர் சம்பாதித்த சொத்தை மக்களுக்காக அர்ப்பணித்தார். அப்படி இப்போது எந்த நடிகராவது, அரசியல் வாதியாவது உள்ளார்களா? திடீரென இப்போது இந்த நடிகர் எம்.ஜி.ஆரை கையில் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிற ஆட்சி எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதற்கு திருப்பூரை உதாரணமாக காட்டலாம். சீனாவில் இருந்து, கொரோனா எப்படி பரவியதோ அதுபோல், திருப்பூரில் இருந்து, குப்பையால் மிகப்பெரிய தொற்று நோய் பரவ போகிறது.
இவ்வாறு, ஜெயராமன் பேசினார்.

