ஆசை காட்டி மோசம் செய்த நபர் : நடிகை போலீஸில் புகார்
ஆசை காட்டி மோசம் செய்த நபர் : நடிகை போலீஸில் புகார்
ADDED : மே 26, 2025 06:00 PM

சென்னை : சென்னையை சேர்ந்த நடிகையும், மாடலிங் மற்றும் தொழிலதிபராக உள்ள 30 வயது பெண்ணிடம், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய நபர், வெளிநாடு தப்பி விட்டதாக விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் நடிகை அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புகார் குறித்து சம்பந்தப்பட்ட நடிகை அளித்த பேட்டி: என்னுடன் கல்லுாரியில் படித்த சீனியர் மணப்பாக்கத்தை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் ஜவஹர், 34 என்னிடம் நட்பாக பழகினார். அவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். குடும்பத்தினர் கனடாவில் வசிக்கின்றனர். அலெக்ஸின் பெற்றோர் சென்னையில் உள்ளனர்.
கல்லுாரி படித்த நாள் முதல், நட்பாக பழகி வந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு, காதலிப்பதாக அலெக்ஸ் கூறினார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். இந்நிலையில், வெளிநாடு செல்லும் ஆசையில், 2018ம் ஆண்டு வேலுார் பெண்ணை திருமணம் செய்த அலெக்ஸ் அவருடன் கனடாவில் வேலைக்கு சேர்ந்தார்.
அதன்பின் மீண்டும் என்னிடம் பேசிய அலெக்ஸ், 'என் மனைவி என்னை கொடுமைப்படுத்துகிறார். அவருடன் என்னால் இருக்க முடியவில்லை அவரை விரைவில் விவாகரத்து செய்யப் போகிறேன். உன்னை காதலிக்கிறேன். திருமணம் செய்து கொள்' எனக்கூறி வற்புறுத்தினார்.
அலெக்ஸ், நிஜமாகவே திருமண உறவில் பாதித்துள்ளார், அவரும் நம்மை உண்மையாக காதலிக்கிறார். அதனால் அவரையே திருமணம் செய்து கொள்ளலாம் முடிவு எடுத்தேன். கடந்தாண்டு மே மாதம் என்னிடம் பேசிய அலெக்ஸ், 'விரைவில் சென்னை வருகிறேன் அப்போது மனைவியை விவாகரத்து செய்கிறேன். பின் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன். கனடாவில் வசிக்க பிடிக்கவில்லை. இந்தியாவிலேயே செட்டில் ஆகிறேன்' என்றார்.
அதன்படி, கடந்தாண்டு இறுதியில் சென்னை வந்த அலெக்ஸ், டிசம்பர் மாதம் 6ம் தேதி, சோழிங்கநல்லுாரில் உள்ள விடுதியில் அறை எடுத்து, இருவரும் ஒன்றாக தங்கினோம். என்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்வதாக உறுதி அளித்த நிலையில் அவரிடம் என்னை பறிகொடுத்தேன். பின் கனடா சென்ற அலெக்ஸ், கண்டு கொள்ளவே இல்லை. அவர் சொன்னபடி மனைவியை விவாகரத்தும் செய்யவில்லை. மாறாக சமூகவலைதளத்தில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக உள்ள வீடியோ மற்றும் படங்களை பகிர்ந்து வந்துடன் என் மொபைல் அழைப்பையும் நிராகரித்தார்.
நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். அலெக்ஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அலெக்ஸின் பெற்றோரிடம், விசாரித்தனர். விசாரணைக்கு அலெக்ஸ் ஒத்துழைக்காத நிலையில், அவரை இந்தியா வரவழைத்து விசாரிக்க போலீசார் முடிவு எடுத்துள்ளனர்.
செக்ஸிற்காக, எட்டு ஆண்டுகளாக என்னை நம்ப வைத்ததுடன், அவரது மனைவியையும் என்னிடம் தவறாக சித்தரித்து ஏமாற்றியது என்னால் தாங்க முடியவில்லை. என்னைப் போல் பாதிக்கும் பெண்கள் பலர், விஷயத்தை வெளியே சொல்வதில்லை. இதனால் தவறு செய்யும் ஆண்கள் தொடர்ந்து பெண்களை ஏமாற்றி வருகின்றனர். அத்தகைய நபர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.