அபாண்டமாக பேசிய அதிமுக மாஜி நிர்வாகிக்கு நடிகை திரிஷா நோட்டீஸ்: 'மன்னிப்பு கேள் இல்லையெனில் நடவடிக்கை பாயும்'
அபாண்டமாக பேசிய அதிமுக மாஜி நிர்வாகிக்கு நடிகை திரிஷா நோட்டீஸ்: 'மன்னிப்பு கேள் இல்லையெனில் நடவடிக்கை பாயும்'
ADDED : பிப் 22, 2024 01:20 PM

சென்னை: நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகிக்கு நடிகை திரிஷா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், '24 மணிநேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
2017ம் ஆண்டில் அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்ட போது அக்கட்சியின் எம்எல்ஏ.,க்கள் அணி மாறாமல் இருக்க கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இது தொடர்பாக முன்னாள் அ.தி.மு.க., நிர்வாகி ஏ.வி.ராஜூ என்பவர் ஒரு வீடியோவில் பேசி இருந்தார். அதில் நடிகை திரிஷா மற்றும் நடிகர் கருணாஸ் குறித்து அவதூறாக பேசியிருந்தார். அந்த வீடியோ சமூகவலைதளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திரையுலகை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
நடிகர் கருணாஸ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தன்னை பற்றியும், திரிஷா பற்றியும் உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிட்ட ராஜூ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். நடிகை திரிஷாவும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பேன் எனத் தெரிவித்திருந்தார்.
இந்தச்சூழலில் ராஜூ மன்னிப்பு கேட்க வேண்டும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார் திரிஷா. அதில், ‛‛தன்னை பற்றி அவதூறாக பேசிய அ.தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ இந்த நோட்டீஸ் கிடைக்கப் பெற்ற 24 மணி நேரத்தில் பொது வெளியில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பத்திரிக்கை, ஊடகங்கள், யூடியூப் சேனல்கள் மூலம் வீடியோ வெளியிட வேண்டும். மேலும் ஏற்கனவே வெளியான அவதூறு வீடியோக்களை அனைத்து தளங்களில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வீடியோ பற்றி விளக்கம் அளித்த ராஜூ, ‛‛நடிகை த்ரிஷா குறித்து திரித்து வெளியிடப்பட்டுள்ளது. நான், திரிஷா குறித்து பேச, அவ்வளவு பெரிய ஆள் இல்லை. திரிஷாவை நான் சொல்லவில்லை. திரிஷா உள்ளிட்ட சினிமா துறையினரிடம் மன்னிப்பு கோருகிறேன்'' எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.