ADDED : மார் 06, 2024 11:51 PM
சென்னை:சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும், 11க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கின் விசாரணையை துவக்கக்கூடாது; தள்ளி வைக்க வேண்டும் என, செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்த மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், தன்னை அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்த மனு, நீதிபதி எஸ்.அல்லி முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
செந்தில் பாலாஜி சார்பில் வழக்கறிஞர் மா.கவுதமன் ஆஜராகி, ''இந்த மனு மீது மூத்த வழக்கறிஞர் ஆஜராகி வாதிட உள்ளதால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்,'' என்றார்.
அதை ஏற்ற நீதிபதி, வழக்கின் விசாரணையை, வரும் 11க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
பின், புழல் சிறையில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை, 24வது முறையாக மார்ச் 11 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

