திருமா மீது நடவடிக்கை எடுக்க மறுப்பு; பார் கவுன்சிலுக்கு நிர்வாகி எதிர்ப்பு
திருமா மீது நடவடிக்கை எடுக்க மறுப்பு; பார் கவுன்சிலுக்கு நிர்வாகி எதிர்ப்பு
ADDED : அக் 14, 2025 04:45 AM

சென்னை :
தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் இணை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு வெளியிட்டுள்ள அறிக்கை:
சென் னை உயர் நீதிமன்றம் அருகே, சில தினங்களுக்கு முன், ராஜிவ் காந்தி என்ற வழக்கறிஞரின் டூ - வீலர் வாகனம் மீது, திருமாவளவன் கார் மோதியது.
இவ்விவகாரத்தில், வழக்கறிஞர் ராஜிவ் காந்தியை, வி.சி., வழக்கறிஞர்கள், திருமாவளவன் ஆதரவாளர்கள் உள்பட பலர் கொடூரமாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். ஆனால் இவ்விவகாரத்தில், திருமாவளவன் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருவதோடு, ஆணவமாக பேசி வருகிறார்.
காயம் அடைந்த வழக்கறிஞர் அளித்த புகார் மீது, இதுவரை வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும், பார் கவுன்சில் அலுவலகத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக, பார் கவுன்சிலும் போலீசில் புகார் தெரிவிக்காததோடு, அலுவலகத்தில் தாக்குதல் நடத்திய வழக்கறிஞர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. திருமாவளவன், பார் கவுன்சிலில் பதிவு செய்த வழக்கறிஞர்.
இதே செயலை வேறொரு கட்சியை சார்ந்தவர் அல்லது வேறொரு சமூகத்தைச் சார்ந்தவர்கள் மேற்கொண்டு இருந்தால், இதே நிலைப்பாட்டை தான் பார் கவுன்சில் மேற்கொண்டு இருக்குமா?
எனவே, பார் கவுன்சில் தலைவர், தாக்குதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மீதும், திருமாவளவன் மீதும், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.