ஓடாத ஓட்டை எஞ்ஜின் ஆட்சியை நடத்திவிட்டு...! முதல்வர் ஸ்டாலினை விளாசும் இபிஎஸ்
ஓடாத ஓட்டை எஞ்ஜின் ஆட்சியை நடத்திவிட்டு...! முதல்வர் ஸ்டாலினை விளாசும் இபிஎஸ்
ADDED : ஜன 23, 2026 10:05 PM

சென்னை: ஒரு 'ஓடாத ஓட்டை எஞ்ஜின் ஆட்சி'யை நடத்திவிட்டு, தமிழகத்தின் வளர்ச்சியை முன்னிறுத்தும் எங்கள் கூட்டணியைப் பற்றி பேசுவதெல்லாம் வேடிக்கையின் உச்சம் என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை;
இன்றைய தினம், மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் இணைந்து பங்கேற்றதில் பெருமகிழ்ச்சி. எங்கள் கூட்டணியின் எழுச்சியை நேரலையில் ஸ்டாலின் பார்த்து அலறிப் போய் விட்டார் போல.
உடனே எக்ஸ் தளத்தில் தனது புலம்பலை ஆரம்பித்துவிட்டார். 'அடி மேல் அடி வைத்தால் அம்மி கூட நகரும்' என்பார்கள். ஆனால், நான்கரை ஆண்டுகளாக ஒரு அடி கூட நகராத, ஒரு 'ஓடாத ஓட்டை எஞ்ஜின் ஆட்சி'யை நடத்திவிட்டு, இந்த முதல்வர், தமிழகத்தின் வளர்ச்சியை முன்னிறுத்தும் எங்கள் கூட்டணியைப் பற்றி பேசுவதெல்லாம் வேடிக்கையின் உச்சம்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் அமையவுள்ள அதிமுக அரசு, நமது மாநிலத்தின் நியாயமான தேவைகளை மத்திய அரசிடம் உரிமையோடு கேட்டுப் பெறும். மத்தியில் உள்ள என்டிஏ அரசும், தமிழகத்திற்கான நிதிகள், திட்டங்களை வாஞ்சையோடு வழங்கும்.
'மதுரை மெட்ரோ எங்கே? கோவை மெட்ரோ எங்கே?' என்று வாய்கிழிய கேட்கும் நீங்கள், எதற்காவது ஒழுங்கான ஆவணங்களை, அறிக்கைகளை மத்திய அரசிடம் சமர்பித்தீர்களா? இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும்? நீங்கள் தான் ஒன்றும் தெரியாத முதல்வர் ஆச்சே... உங்கள் அதிகாரிகளிடம் இதையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்ளாமல், எதற்காக வெறும் காற்றில் கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள்?
தமிழகத்தில் ஆட்சி, நாடாளுமன்றத்தில் 39 எம்.பி.க்கள் என எல்லாவற்றையும் கொடுத்த தமிழக மக்களுக்கு எதுவுமே செய்யாமல் ஏமாற்றி நீங்கள் நடத்திய பிராடு மாடல் திமுக ஆட்சியைக் கண்ட பிறகு, நீங்கள் எத்தனை தகிடுத்தத்தங்கள் போட்டாலும், இனி தமிழ்நாடு ஏமாறாது.
குடும்ப ஆட்சியை, ஊழல் ஆட்சியை, மக்களின் பாதுகாப்பை சீர்குலைத்த விடியா ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் ஒருமித்த எண்ணம். மக்களின் எண்ணத்தை ஈடேற்ற அமைந்ததே அதிமுக தலைமையிலான இந்த வெற்றிக் கூட்டணி!
எங்கள் கூட்டணியின் முதல் பொதுக்கூட்டத்தைக் கண்டு இப்படி பயந்துவிட்டீர்களே ஸ்டாலின் இது தொடக்கம் தான். இன்னும் வரவேண்டியது நிறைய இருக்கிறது. ஜெயலலிதா கூறுவது போல், நமது இலட்சியம் உயர்வானது! நமது பார்வை தெளிவானது! நமது வெற்றி உறுதியானது!நாளை நமதே!
இவ்வாறு அந்த அறிக்கையில் இபிஎஸ் கூறி உள்ளார்.

