பரமக்குடி-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை: பிரதமருக்கு நன்றி கூறிய இ.பி.எஸ்.
பரமக்குடி-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை: பிரதமருக்கு நன்றி கூறிய இ.பி.எஸ்.
ADDED : ஜூலை 02, 2025 11:34 AM

சென்னை: பரமக்குடி-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்த ஒப்புதல் வழங்கிய பிரதமர் மோடிக்கு, இ.பி.எஸ். நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பரமக்குடி-ராமநாதபுரம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது.
ரூ. 1,853 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் இந்த வழித்தட மேம்பாட்டு திட்டமானது, பயண நேரத்தை குறைத்து, பயணப் பாதுகாப்பை மேம்படுத்துவதுடன், தென் தமிழகத்தில், குறிப்பாக ராமேஸ்வரம் புனித யாத்திரைப் பகுதியில் சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை பெரிதும் ஊக்கப்படுத்தும்.
தமிழ்நாட்டின் சாலை இணைப்புத் திட்டங்களுக்கும்,பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னுரிமை வழங்கும் இந்தியப் பிரதமர் மோடிக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.