சட்டம், ஒழுங்கு சீர்கேடு, போதை பொருள் நடமாட்டம்; வரும் 9ம் தேதி அ.தி.மு.க. உண்ணாவிரதம்
சட்டம், ஒழுங்கு சீர்கேடு, போதை பொருள் நடமாட்டம்; வரும் 9ம் தேதி அ.தி.மு.க. உண்ணாவிரதம்
ADDED : செப் 28, 2024 11:31 AM

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து வரும் 9ம் தேதி அ.தி.மு.க., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு; தமிழக இளைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் என்று 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். அரசுத் துறைகளில் 5.50 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.
மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்பது உள்ளிட்ட தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், இளைஞர்கள், பெண்கள் நலனை முன்னிறுத்தி அ.தி.மு.க., ஆட்சிகளில் செயல்படுத்தப்பட்ட தாலிக்குத் தங்கம், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இரு சக்கர வாகன மானியம், மாணவர்களுக்கு மடிக் கணினி உள்ளிட்ட அம்மா அரசில் செயல்படுத்தப்பட்ட பல முத்தான திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நிறுத்தியதைக் கண்டித்தும்,
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி முல்லைபெரியாறு அணையை 152 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும், தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்தும், அதிகரித்து வரும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தையும், அதனால் ஏற்படும் சமூக விரோத குற்றங்களை கட்டுப்படுத்தத் தவறிய ஸ்டாலினின் தி.மு.க.,அரசைக் கண்டித்தும்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக புரட்சித் தலைவி பேரவை சார்பில், 9.10.2024 அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை, மதுரை பழங்காநத்தத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார், தலைமையில், மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் முன்னிலையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு இ.பி.எஸ்., அந்த அறிக்கையில் அறிவித்துள்ளார்.