எம்.ஜி.ஆருடன் யாரையும் ஒப்பிட முடியாது: ஜெயக்குமார்
எம்.ஜி.ஆருடன் யாரையும் ஒப்பிட முடியாது: ஜெயக்குமார்
ADDED : டிச 24, 2024 02:16 PM

சென்னை: எந்த நிலையிலும் எம்.ஜி.ஆருடன் பிரதமர் மோடியை ஒப்பிட முடியாது என்று அ.தி.மு.க., மாஜி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க., நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர்., நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் கருப்பு சட்டை அணிந்து பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
அப்போது மாஜி அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது;
எம்.ஜி.ஆர்., உடன் யாரையும் ஒப்பிட முடியாது. வரலாற்றில் முத்திரை பதித்த, யாருடனும் ஒப்பிட முடியாத தலைவர் என்றால் அது எம்.ஜி.ஆர்., தான். அவர் சாதி, சமயம், வேறுபாடு பார்க்கவில்லை, அதேபோன்று மத ரீதியான அரசியல் செய்யவில்லை. இதை அண்ணாமலை ஒத்துக் கொள்கிறாரா?
எம்.ஜி.ஆரை எல்லோருக்குமான தலைவர் என்று பலரும் பார்ப்பதை போல பிரதமர் மோடியை பார்க்கின்றனரா? அவர் ஆட்சிக்காலத்தில் எவ்வளவோ திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. குறிப்பாக கூற வேண்டும் என்றால், சமூக நீதி அடிப்படையில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்.
சமத்துவம் பார்க்கின்ற இயக்கம் அ.தி.மு.க. ஆனால் அந்த சமநிலையை பா.ஜ., பார்க்கிறதா? சமநிலை எங்கே உள்ளது? எந்த நிலையிலும் அவருடன் பிரதமரை ஒப்பிடவே முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, எம்.ஜி.ஆரை பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டு பா.ஜ., தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்து இருந்ததது குறிப்பிடத்தக்கது.