ADDED : செப் 22, 2024 03:03 AM
புதுடில்லி:முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக, 2020 டிசம்பரில், அப்போது தமிழக பா.ஜ., தலைவராக இருந்த மத்திய இணை அமைச்சர் முருகன் குற்றஞ்சாட்டினார்.
இதையடுத்து முரசொலி அறக்கட்டளை நிர்வாகம் அளித்த புகாரின்படி அவர் மீது அவதுாறு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து 2023 செப்., 5ல் உச்ச நீதிமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் முருகன் மேல் முறையீடு செய்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
முருகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இந்த வழக்கில் அவதுாறு எங்கே இருக்கிறது?' என கேள்வி எழுப்பினார். இதனால் முரசொலி அறக்கட்டளை வழக்கறிஞர், கோபம் அடைந்தார். இதையடுத்து, 'கோர்ட்டில் தேவையில்லாமல் எரிச்சல் படக்கூடாது' என, முரசொலி வழக்கறிஞருக்கு அட்வைஸ் செய்த நீதிபதிகள், விசாரணையை ஒத்தி வைத்தனர்.