UPDATED : மார் 16, 2024 07:00 AM
ADDED : மார் 16, 2024 12:05 AM

சென்னை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, 1 கி.மீ., துாரத்தில் வால்டாக்ஸ் சாலையில் பழமையான யானைகவுனி மேம்பாலம் உள்ளது. 1933ல் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த மேம்பாலம், வலதுபுறம் பேசின்பாலம் பணிமனையும், இடதுபுறம் சால்ட் கோட்ரஸ் சரக்கு பணிமனையும் இணைக்கும் வகையில் உள்ளது.
பழமையான இந்த மேம்பாலம், சிதிலமடைந்து வலுவிழந்தது. பெரும் விபத்து அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், கனரக மற்றும் இலகு ரக வாகன போக்குவரத்திற்கு தடை விதித்து, கடந்த 2016ல் பாலம் மூடப்பட்டது.
இதையடுத்து, தெற்கு ரயில்வே துறையின் 49 கோடி ரூபாய், சென்னை மாநகராட்சியின் 30.78 கோடி ரூபாய் நிதியுதவி என, 79.78 கோடி ரூபாய் நிதியில், புதிய மேம்பாலம் கட்ட முடிவெடுக்கப்பட்டது.
ஆனால், பாலத்தை இடிக்க வேண்டும் என்றால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மூன்று நாட்கள் ரயில் சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, 2020ல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதை பயன்படுத்தி, தெற்கு ரயில்வே, தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உதவியோடு, பழமையான பாலம் இடித்து அகற்றப்பட்டது.
பின், 2020 ஆகஸ்டில் 520 மீட்டர் துாரம், 20.1 மீட்டர் அகலத்தில் புதிய மேம்பால பணிகள் துவங்கின.
ரயில்வே போக்குவரத்திற்கு இந்த தடம் முக்கியமானது என்பதால், சேவை பாதிக்கப்படாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், பணியின்போது பேசின்பாலம், மூலக்கொத்தளம், வியாசர்பாடி, புளியந்தோப்பு, ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில், கட்டுமான பணிகள் முடிந்து, எட்டு ஆண்டுகளுக்குபின் யானைகவுனி மேம்பாலம், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, நேற்று திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய சென்னை எம்.பி., தயாநிதி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இது குறித்து மேம்பாலத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'யானைகவுனி மேம்பாலத்தில் வால்டாக்ஸ் சாலையில் இருந்து ராஜா முத்தையா சாலையை நோக்கி செல்லும் ஒரு வழிப்பாதை பணி, இருவழிப் பாதையாக மாற்றப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இலகுரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. வரும் மே மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்' என்றனர்.
இது குறித்து மேம்பாலத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'யானைகவுனி மேம்பாலத்தில் வால்டாக்ஸ் சாலையில் இருந்து ராஜா முத்தையா சாலையை நோக்கி செல்லும் ஒரு வழிப்பாதை பணி, இருவழிப் பாதையாக மாற்றப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இலகுரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. வரும் மே மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்' என்றனர்.
'ரயில்வே துறை மெத்தனம்'
இது குறித்து, மத்திய சென்னை தி.மு.க., - எம்.பி., தயாநிதி கூறியதாவது:
பாழடைந்த யானைகவுனி மேம்பாலம் 2016ல் மூடப்பட்டது. 2019 முதல் '20 முறை' ரயில்வே பொது மேலாளர், மத்திய ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து, பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, முறையிட்டுள்ளேன். பார்லிமென்டிலும் குரல் எழுப்பி உள்ளேன். ஆனால் ஆமை வேகத்தில் பாலப்பணிகள் நடந்தன. இதனால், இந்த பாலம் கட்ட எட்டு ஆண்டுகளாகி உள்ளன. சென்ற முறை அதிகாரிகள் சந்தித்த போது, 'பாலப்பணிகள் விரைந்து முடித்து, இரு பக்கமும் போக்குவரத்திற்கு திறக்கப்படும்' என தெரிவித்தனர். ஆனால், ஒரு பக்கம் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு உட்பட பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ஆனால், ரயில்வே பகுதிக்கு உட்பட்ட பணி மட்டுமே மெத்தனமாக நடக்கிறது. இதில் இருந்தே, மத்திய அரசு, மாநில அரசை வஞ்சிப்பது தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

