பிப்.,5க்கு பின் பாம்பன் ரயில் துாக்குப்பாலம் நகர்த்தப்படும்
பிப்.,5க்கு பின் பாம்பன் ரயில் துாக்குப்பாலம் நகர்த்தப்படும்
ADDED : ஜன 30, 2024 08:18 AM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் அமைத்துள்ள புதிய ரயில் துாக்குப்பாலத்தை பிப்.,5க்கு பின் நகர்த்தி நடுப்பாலத்திற்கு கொண்டு செல்ல உள்ளனர்.
பாம்பன் கடலில் 2 கி.மீ., துாரத்திற்கு அமைந்துள்ள ரயில் பாலம் பலவீனமாகி நடுவில் உள்ள துாக்கு பாலம் சேதமடைந்ததால் 2022 முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ரூ.525 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டுமான பணி துரிதமாக நடக்கிறது.
இதில் துாண்கள் அமைத்து 1.5 கி.மீ.,க்கு இரும்பு கர்டர்கள், தண்டவாளங்கள் பொருத்தி உள்ளனர். பாலத்தின் நடுவில் கப்பல்கள், படகுகள் கடந்து செல்ல ஏதுவாக துாக்கு பாலத்தை வடிவமைக்கும் பணி நடந்தால் மீதமுள்ள 500 மீ.,ல் இரும்பு கர்டர், தண்டவாளம் பொருத்தப்படவில்லை.
700 டன் உயர்ந்தது
500 டன்னில் புதிய துாக்கு பாலம் பாம்பன் கடற்கரையில் வடிவமைக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 200 டன் அதிகரித்து 700 டன்னாக உயர்ந்துள்ளது. இந்த துாக்கு பாலத்தை வடிவமைக்கும் பணி நுாறு சதவீதம் முடிந்தது. இதனை வரும் பிப்., 5க்கு பின் நகர்த்தி பாலத்தின் நடுவில் பொருத்த திட்டமிட்டுள்ளனர். புதிய துாக்கு பாலத்தை நடுவில் கொண்டு செல்ல 20 முதல் 30 நாட்கள் வரை நீடிக்கும் என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.