250 அரங்குகளுடன் வேளாண் கண்காட்சி; திருவண்ணாமலையில் இன்று துவக்கம்
250 அரங்குகளுடன் வேளாண் கண்காட்சி; திருவண்ணாமலையில் இன்று துவக்கம்
ADDED : டிச 27, 2025 06:21 AM

சென்னை: வேளாண் துறையினர் நடத்தும் இரண்டு நாள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று துவங்குகிறது.
முதல்வர் ஸ்டாலின், இரண்டு நாள் பயணமாக, கள்ளக்குறிச்சி மற்றும் திரு வண்ணாமலை மாவட்டத் திற்கு சென்றுள்ளார்.
நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை சிப்காட் தொழில் பூங்காவில், உலக அளவில் காலணிகள் உற்பத்தியில், முன்னிலை வகிக்கும், தைவான் நாட்டின் பவுசென் குழுமத்தை சேர்ந்த, ஹை க்ளோரி புட்வேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 2,302 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கும், காலணிகள் உற்பத்தி ஆலை வடிவமைப்பை, முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
ஐந்து பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதன்பின், அரசு விழாவில் பங்கேற்றார்.
தோட்டக்கலை திருவண்ணாமலை திருக்கோவிலுார் சாலையில், அரசு மேல்நிலைப் பள்ளி எதிரில், இன்றும், நாளையும் நடக்க உள்ள, வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை, இன்று முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.
பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து, வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி கூறியதாவது:
வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம், கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட, பல்வேறு துறைகளின் அரங்குகள் கண்காட்சியில் அமைக்கப்பட உள்ளன.
பண்டைய காலம் முதல், தற்போது வரையுள்ள தானிய சேமிப்பு முறைகள், புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை, வேளாண் வணிகத் துறையினர் காட்சிப்படுத்த உள்ளனர்.
பசுமை குடில், ஊட்டச்சத்து வேளாண்மை, வணிக ரீதியில் உதிரி மலர்கள் சாகுபடி, காளான் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து, தோட்டக்கலைத் துறை அரங்கு அமைக்கப்பட உள்ளது.
தனியார் உர நிறுவனங்கள், வேளாண் இயந்திரங்கள் தயாரிப்பு நிறுவனங்களின் அரங்குகள் உட்பட, மொத்தம் 250 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
உணவு விற்பனை பல்வேறு கால்நடைகள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், கோழி ரகங்கள் குறித்த மாதிரிகளும் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் பாரம்பரிய உணவு விற்பனையும் நடக்கவுள்ளது.
முதல்வர் ஸ்டாலின், இந்த கண்காட்சியை துவக்கி வைப்பதுடன், 80,571 விவசாயிகளுக்கு, 669 கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகளையும் வழங்கவுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

