ADDED : செப் 12, 2026 03:53 AM
சென்னை: வேளாண் துறை செயலராக இருந்த சங்கர் திடீரென பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
த.வெ.க., அரசு பொறுப்பேற்றதும், வேளாண் துறை செயலராக சங்கர் நியமனம் செய்யப்பட்டார். டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கான குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை, 134 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இவரது கண்காணிப்பில் அரசு செயல்படுத்தியது.
இதை தொடர்ந்து, 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டு பசுந்தாள் உரம், தக்கை பூண்டு, திட மற்றும் திரவ உரங்கள் ஆகியவை, ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட்டு, மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், வேளாண் துறை செயலராக இருந்த சங்கர், நேற்று திடீரென பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்; தொல்லியல் துறை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சமூக நீதித் துறை செயலராக உள்ள சுப்பையனிடம், வேளாண் துறை செயலர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை, தலைமை செயலர் சாய்குமார் பிறப்பித்துள்ளார். வேளாண் துறை செயலர் சங்கர் இடமாற்றம், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சில ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்படலாம் என, தலைமை செயலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
