UPDATED : பிப் 28, 2026 05:03 AM
ADDED : பிப் 28, 2026 03:44 AM

தே.ஜ., கூட்டணியில் இணைந்து, 'அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியுடனான பகையை மறந்து பங்காளி ஆகி விட்டோம்' என அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் கூறி, ஒரு மாதம் ஆகி விட்டது.
அதன் பின், இருவரும் இணைந்து எந்தவொரு அரசியல் நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. இது இரு கட்சியினர் இடையே, சுமுக உறவு இல்லாத நிலையை காட்டுவதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க.,வினர் கூறியதாவது:
தினகரன், சில நிர்பந்தங்களுக்கு ஆட்பட்டு, தே.ஜ., கூட்டணியில் இணைந்து விட்டார். ஆனால், கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி என கூற மறுக்கிறார்.
அதோடு, தங்கள் கட்சிக்கு, கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ., சீட்களை ஒதுக்கும் என்ற ரீதியில் பேசுகிறார். அ.ம.மு.க.,வினர், அ.தி.மு.க.,வோடு உள்ள பழைய பகையை மறக்கவில்லை.
அதனால் தான், பழனிசாமி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு அழைத்தும் அ.ம.மு.க.,வினர் புறக்கணிக்கின்றனர். இதனால், இரு கட்சியினரும் தேர்தல் பணியில் இணைந்து செயல்படுவரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, பீஹார் தேர்தலின்போது, தே.ஜ., கூட்டணி தலைவர்கள் இடையே ஒற்றுமை ஏற்படுத்த, கூட்டணி கட்சி தலைவர்களின் வீடுகளில் விருந்து நிகழ்ச்சி நடந்தது.
அதேபோன்று, தமிழகத்திலும், பழனிசாமி - தினகரன் வீடுகளில் விருந்து நிகழ்ச்சிக்கு, பா.ஜ., தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதற்கு தினகரன் ஒப்புக்கொள்ளாததால், அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

