UPDATED : டிச 23, 2025 05:00 PM
ADDED : டிச 23, 2025 04:56 PM

சென்னை: திமுக ஆட்சியை பாஜ உடன் இணைந்து அகற்றுவோம் என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.
சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உடன், தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சந்தித்து பேசினார்.
திட்டம்
இதன் பிறகு நிருபர்களிடம் இபிஎஸ் கூறியதாவது: நீண்ட இடைவேளைக்கு பிறகு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசினோம். தமிழக நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தனர். 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக பாஜ கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டோம். அதிமுக பாஜ மற்றும் தேஜ கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றும். அதற்கான திட்டம் குறித்து பேச்சு நடந்தது.
தமிழக மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். திமுக ஆட்சியை அகற்றுவதற்கான பணியை அதிமுக பாஜ கூட்டணி செயல்படுத்தும். சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் வழிகாட்டுதல்
முன்னதாக பியூஷ் கோயல் கூறியதாவது: எனது நண்பரும், சகோதரருமான இபிஎஸ் சந்தித்துப் பேசியதில் மகிழ்ச்சி. இன்றைய சந்திப்பில் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் தொடர்பான விவாதம் நடந்தது. பிரதமர் மோடியின் வழிகாட்டுதலுடன் 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வோம். சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். திமுகவின் ஊழல் ஆட்சியில் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள், சிறுகுறு தொழில், சிறு நிறுவனங்கள் தொழிற்சாலை, வர்த்தகர்களின் சிறந்த எதிர்காலத்தை வழங்கும் சிறந்த அரசு தமிழக மக்களுக்கு கிடைப்பது மிகவும் முக்கியம்.
நமது தமிழ் சகோதரர் சகோதரிகளுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை வழங்குவதே தேஜ கூட்டணியின் உறுதிமொழி. அதுவே பிரதமர் மோடியின் உறுதிமொழி. அதுவே தமிழகத்தில் நமது தலைவர்களின் உறுதிமொழி. அதிமுக பாஜ மற்றும் தேஜ கூட்டணி கட்சிகள் இணைந்து தமிழகத்தின் பொன்னான எதிர்காலத்துக்கு பாடுபடுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

