கருத்து வேறுபாடுகள் விரைவில் சரியாகும் நிர்வாகிகளிடம் அ.தி.மு.க., 'மாஜி' உறுதி
கருத்து வேறுபாடுகள் விரைவில் சரியாகும் நிர்வாகிகளிடம் அ.தி.மு.க., 'மாஜி' உறுதி
ADDED : மே 17, 2026 12:22 AM
பள்ளிப்பாளையம்: “கட்சியில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் விரைவில் சரியாகி விடும்; எப்போதும் போல கட்சி வேலைகளை செய்யுங்கள்,” என, தன்னை சந்திக்க வந்தவர்களிடம், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அ.தி.மு.க.,வில் அமைப்பு செயலர், நாமக்கல் மாவட்ட செயலர் ஆகிய பொறுப்புகளை தங்கமணி வகித்தார். சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், வேலுமணி அணி, பழனிசாமி அணி என, அ.தி.மு.க., இரண்டாக உடைந்தது.
இதில், வேலுமணி அணிக்கு, முன்னாள் அமைச்சர் தங்கமணியும் ஆதரவு தெரிவித்திருந்தார்.
இதனால், கடந்த 13ல், 'அ.தி.மு.க., அமைப்பு செயலர், நாமக்கல் மாவட்ட செயலர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் தங்கமணி விடுவிக்கப்படுகிறார்' என, பொதுச்செயலர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
இதையறிந்த, நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, பள்ளிப்பாளையம் அருகே கோவிந்தம்பாளையத்தில் உள்ள வீட்டிற்கு தங்கமணி வந்தார்.
அவரை குமாரபாளையம் தொகுதி மட்டுமின்றி, நாமக்கல் மாவட்டம் முழுதும் உள்ள அ.தி.மு.க., நிர்வாகிகளும், தொண்டர்களும் சந்தித்து பேசினர்.
இதுகுறித்து அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'முன்னாள் அமைச்சர் தங்கமணியை, அவரது வீட்டில் சந்தித்து, உங்களுடன் நாங்கள் எப்போதும் இருப்போம்' என உறுதியளித்தோம்.
அதற்கு அவர், 'இ.பி.எஸ்., தான் பொதுச்செயலர், அதில் எந்த மாற்றமும் இல்லை; நல்லதே நடக்கும். நிர்வாகிகள் அனைவரும் கட்சி பணிகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.
'நடந்து முடிந்த தேர்தலில் ஏற்பட்ட சில சங்கடங்களும், குழப்பங்களும் தற்காலிகமானவை. சில நாட்களில் அவை விரைவில் சரியாகி விடும் என தெரிவித்தார்' என்றார்.
