2026ல் அ.தி.மு.க., ஆட்சியை பிடிக்கும் பொதுச்செயலர் பழனிசாமி நம்பிக்கை
2026ல் அ.தி.மு.க., ஆட்சியை பிடிக்கும் பொதுச்செயலர் பழனிசாமி நம்பிக்கை
ADDED : டிச 16, 2024 12:43 AM
சென்னை: ''தி.மு.க., 200 இடங்களில் வெல்லும் என, ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். ஒரு போதும் அவரது கனவு நிறைவேறாது. அ.தி.மு.க.,வில் எழுச்சி பிறந்து விட்டது.
''வரும், 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி, 200 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
நிலையானது
நேற்று நடந்த கட்சியின் பொதுக்குழுவில் அவர் பேசியதாவது:
கூட்டணி அவ்வப்போது வரும்; போகும். ஆனால், அ.தி.மு.க.,வின் கொள்கை நிலையானது. 2016ல் ஜெயலலிதா, 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க.,வை தனித்து போட்டியிட வைத்து ஆட்சியை பிடித்தார். நம் பலம் நமக்கு தெரியவில்லை. எந்த கட்சிக்கும் இல்லாத தொண்டர்கள் நிறைந்த கட்சி இது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், 1.98 லட்சம் ஓட்டுகள் குறைவாக பெற்றதால், அ.தி.மு.க.,வால் ஆட்சிக்கு வர முடியவில்லை. நாம், 34 இடங்களில், குறைந்த ஓட்டுகளில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். தி.மு.க., மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் நாம், 19.39 சதவீத ஓட்டுகள் பெற்றோம். அந்த தேர்தலில் வளமான கூட்டணி அமைத்தோம். ஆட்சி அதிகாரம் இருந்தது. கடந்த 2024 லோக்சபா தேர்தலில், ஆட்சி, அதிகாரம் இல்லாத நிலையில், 20.5 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளோம்.
தி.மு.க., 2019 லோக்சபா தேர்தலில், கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு, 33.25 ஓட்டுகளை பெற்றது. தற்போது ஆட்சியில், அதே கூட்டணி இருந்தும், 26.93 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றுள்ளது.
பா.ஜ.,வுக்கும் கூடுதல் ஓட்டுகள் கிடைக்கவில்லை. அ.தி.மு.க., மட்டுமே 1 சதவீத ஓட்டுகளை கூடுதலாக பெற்றுள்ளது. அ.தி.மு.க., மக்கள் செல்வாக்கு பெற்ற கட்சி.
போராட்டம்
ஒற்றுமை என்பது மிகப்பெரிய பலம். யானைக்கு பலம் தும்பிக்கை. நமக்கு பலம் நம்பிக்கை. நம்பிக்கை என்பது மிகப்பெரிய ஆயுதம். நம்பிக்கை இருந்தால் வாழ்விலும், அரசியலிலும் வெற்றி பெற முடியும்; அதை கட்சியினர் உணர வேண்டும்.
தமிழகத்தில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அவற்றுக்கு எதிராக, மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என போராட்டங்களை நடத்த வேண்டும்.
கடந்த முறை, தி.மு.க., ஆட்சியை விட்டு விலகிய போது, 1.14 லட்சம் கோடி ரூபாய் கடனை விட்டு சென்றது. 2021
தொடர்ச்சி 14ம் பக்கம்
இறுதியில் தமிழக அரசின் கடன், 5 லட்சம் கோடி ரூபாய். ஓராண்டு கொரோனாவால் ஒரு ரூபாய் அரசுக்கு வருவாய் இல்லை.
இந்நிலையிலும், எந்த திட்டமும் தடைபடவில்லை. இன்று தி.மு.க., ஆட்சியில், எந்த பெரிய திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. ஆனால், 3.90 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளனர். நிர்வாக திறமையற்ற அரசு.
தமிழகத்தின் நிதி நிலைமை படு பாதாளத்திற்கு சென்று விட்டது. தி.மு.க., அரசு விளம்பர அரசாக உள்ளது. சட்டசபை தேர்தலின் போது, 525 அறிவிப்புகளை வெளியிட்டனர். அதில், 10 சதவீதத்தை கூட நிறைவேற்ற முடியவில்லை. முதல்வர் மற்றும் அமைச்சர்கள், 98 சதவீத வாக்குறுதியை நிறைவேற்றியதாக, தவறான தகவலை பரப்புகின்றனர். இதற்கு 2026 சட்டசபை தேர்தலில், முதல்வர் ஸ்டாலின் பதில் கூறியாக வேண்டும்.
வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவ அதிகாரிகள் போராட்டம் என, தமிழகம் முழுதும் தி.மு.க., போராட்டத்தை சந்தித்து வருகிறது.
சட்டசபையை ஆண்டுக்கு, 100 நாட்கள் நடத்தப் போவதாக அறிவித்தனர். தி.மு.க., ஆட்சியில் நான்கு முறை சட்டசபை கூடியது. இதில், 113 நாட்கள் மட்டுமே சபை நடத்தப்பட்டு உள்ளது; காரணம் பயம்.
முதல்வருக்கு பயம் வந்த போதே, அ.தி.மு.க., வெற்றி பெற்று விட்டது. இம்மாதம் இரண்டு நாட்கள் மட்டுமே சட்டசபை நடத்தப்பட்டது. அதில், ஒரு நாள் மட்டும் பேச விட்டனர். அ.தி.மு.க.,வில் ஒருவர் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டார். அ.தி.மு.க.,வை பார்த்து ஆளும் கட்சிக்கு பயம் வந்து விட்டது.
சமீபத்தில், டங்ஸ்டன் ஆலை விவகாரம் குறித்து, நான் பேசியதை காண்பித்தனர். அதற்கே தி.மு.க., ஆடி போய் விட்டது. நான் பேசுவதை முழுமையாக ஒளிபரப்பி இருந்தால், தி.மு.க., ஆட்சியே இருந்திருக்காது.
'தி.மு.க., 200 இடங்களில் வெல்லும்' என, ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். அவரின் கனவு ஒரு போதும் நிறைவேறாது. அ.தி.மு.க.,வில் எழுச்சி பிறந்து விட்டது. வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி, 200 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடிக்கும். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
இதை தி.மு.க., கூட்டணி கட்சிகள் கண்டு கொள்வதே இல்லை. தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள், ஒரே கொள்கை உடையவை என்று ஸ்டாலின் கூறுகிறார். அப்படியென்றால் எதற்கு கூட்டணி. தி.மு.க.,வில் இணைந்து விடலாமே. அ.தி.மு.க., அப்படி இல்லை. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் அமைக்கப்படுவது. கொள்கை என்பது நிலையானது. அந்த கொள்கை அடிப்படையில், அ.தி.மு.க., செயல்படுகிறது.
அ.தி.மு.க., தலைமைக்கு விசுவாசமாக உள்ளவர்களுக்கு பதவி வழங்கப்படும். கடந்த லோக்சபா தேர்தலில், பலருக்கு வாய்ப்பு கொடுத்தோம். வரும் சட்டசபை தேர்தலில், பொதுக்குழு உறுப்பினர்களில், சிறப்பாக செயல்படுபவர்களுக்கு சட்டசபையில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்.
தி.மு.க.,வை மக்கள் வெறுக்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மக்களை பார்க்கவே தி.மு.க., பொறுப்பாளர்கள் அஞ்சுகின்றனர். அமைச்சர்களும் பயப்படுகின்றனர். அமைச்சர்களை கேள்வி கேட்கும் நிலைக்கு மக்கள் வந்து விட்டனர். இந்த ஆட்சி எப்போது முடிவுக்கு வரும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் அவல ஆட்சி நடக்கிறது. ஜனவரி இறுதியில், 234 தொகுதிகளுக்கும், சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, மக்களை சந்தித்து, தி.மு.க., ஆட்சியின் அவலங்களை எடுத்துக் கூறுவேன். வரும் தேர்தலில் மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும். நமக்கு பொற்காலம் காத்திருக்கிறது. அ.தி.மு.க., ஆட்சி மலரும். அனைவரும் எதிர்பார்க்கின்ற கூட்டணி அமையும்.
வரும், 2026ல் அமையும் நம் ஆட்சி வேறு விதமாக இருக்கும். வரும் சட்டசபை தேர்தலில், குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். தி.மு.க.,வில் உழைப்பவர்களுக்கு மதிப்பு கிடையாது. மூத்த அமைச்சர்களுக்கு துணை முதல்வர் வாய்ப்பு இல்லை. கருணாநிதி குடும்பத்தில் பிறந்ததற்காக, உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுகிறது. தி.மு.க., கட்சி அல்ல. கார்ப்பரேட் கம்பெனி.
இவ்வாறு அவர் பேசினார்.