அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் பிப்.12ல் நீதிமன்றம் உத்தரவு
அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் பிப்.12ல் நீதிமன்றம் உத்தரவு
ADDED : பிப் 07, 2025 10:31 PM
சென்னை:அ.தி.மு.க., பொது செயலராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரிக்கக் கூடாது; அ.தி.மு.க., விதிகளில் திருத்தம் செய்தது செல்லாது என, தேர்தல் கமிஷனிடம் அ.தி.மு.க., முன்னாள் எம்.பி.,க்கள் கே.சி.பழனிசாமி, ஓ.பி.ரவீந்திரநாத், வா.புகழேந்தி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சூரியமூர்த்தி உள்ளிட்டோர் மனு அளித்திருந்தனர். இதன் மீது, தேர்தல் கமிஷன் விசாரிக்க தடை கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மனுக்கள் தாக்கல் செய்தார்.
இவற்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அ.தி.மு.க., உள்கட்சி விவகாரம் தொடர்பாக, தேர்தல் கமிஷன் விசாரிக்க, இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்குகள், நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தேர்தல் கமிஷன் தரப்பில், 'உயர் நீதிமன்ற உத்தரவுபடி, அனைத்து தரப்பினரின் விளக்கத்தை கேட்கும் வகையில், அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது' என்றார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், 'தேர்தல் கமிஷன் வாதத்தை கேட்டே, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதை சுட்டிக்காட்டி, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம். உட்கட்சி விவகாரம் தொடர்பாக அளித்த மனு மீது, தேர்தல் கமிஷன் விசாரிக்க முடியுமா?' என, கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த தேர்தல் கமிஷன் தரப்பு, 'உட்கட்சி விவகாரம் தொடர்பாக, நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளின் உத்தரவுக்கு, தேர்தல் கமிஷன் கட்டுப்படும். தற்போது, இந்த மனுக்களை விசாரிக்க அதிகாரம் உள்ளதா, இல்லையா என்பது குறித்து, இன்னும் எந்த முடிவையும் தேர்தல் கமிஷன் எடுக்கவில்லை' என தெரிவித்தது.
அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தேர்தல் கமிஷனுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய மனுக்கள் மீதான உத்தரவை, வரும் 12ம் தேதிக்கு தள்ளி வைத்து, அதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என, தேர்தல் கமிஷனுக்கு அறிவுறுத்தினர்.