'கேள்வி கேட்க கையை துாக்கி துாக்கி...' கிண்டலடித்தார் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., நையாண்டி செய்யாதீங்க: துரைமுருகன் கண்டிப்பு
'கேள்வி கேட்க கையை துாக்கி துாக்கி...' கிண்டலடித்தார் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., நையாண்டி செய்யாதீங்க: துரைமுருகன் கண்டிப்பு
ADDED : ஏப் 27, 2025 01:30 AM
சென்னை: கேள்வி கேட்க அனுமதி கேட்டு, கையை துாக்குவதால் வலிப்பதாக கூறிய, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ரவியை, சபாநாயகர் அப்பாவு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் கண்டித்தனர்.
சட்டசபையில் கேள்வி நேர விவாதம் நேற்று நடந்தபோது, எம்.எல்.ஏ.,க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, துறை அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
பல்வேறு தொகுதிகளின் எம்.எல்.ஏ.,க்கள், துணை கேள்வி எழுப்புவதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி வழங்கிக் கொண்டு இருந்தார். அப்போது, அரக்கோணம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ரவியை பேசுவதற்கு சபாநாயகர் அழைத்தார்.
அப்போது நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - ரவி: கேள்வி கேட்க கையை துாக்கி துாக்கி வலிக்கிறது.
சபாநாயகர் அப்பாவு: இப்படியெல்லாம் பேசக்கூடாது; கைவலி சரியான பின், பேச கூப்பிடுகிறேன்.
அமைச்சர் துரைமுருகன்: எம்.எல்.ஏ.,க்கள் துணை கேள்வி கேட்பது தவறில்லை. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு அதிகமாக கேள்வி கேட்க அனுமதி கொடுக்க சொல்லியுள்ளோம்.
அதே நேரத்தில், ஒவ்வொருவரும் எழுந்து நின்று, சபாநாயகரை நையாண்டி செய்வது மரபல்ல; அவர் சாதாரண ஆளாக இருந்தாலும், உட்கார்ந்து இருக்கும் இடம் என்பது, மாண்பை காக்கும் இடம். எனவே, அருள்கூர்ந்து யாரும் நையாண்டி செய்யக்கூடாது.
சபாநாயகர் அப்பாவு: எம்.எல்.ஏ., ரவி, இதுவரை மூன்று பிரதான கேள்விகள், மூன்று துணை கேள்விகள் உட்பட ஒன்பது கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பாண்டியன், இதுவரை துணை கேள்வி கேட்கவில்லை; அவருக்கு அனுமதி வழங்கினேன்.
உடனே, மற்றொரு அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன், தனக்கு ஏன் வாய்ப்பு தரவில்லை என்று கேட்கிறார்.
இப்படி, 10 பேர் வந்து, கேள்வி கேட்க பரிந்துரை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அனுமதி கொடுப்பது என் உரிமை.
யாருக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம். அதை அடிப்படையாக வைத்து, அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்து வருகிறேன்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
''கேள்வி கேட்க கை துாக்குவதற்கு பதிலாக, பொத்தானை அழுத்தி அனுமதி கேட்க வசதி ஏற்படுத்த வேண்டும்,'' என, அ.தி.மு.க., - ராஜன் செல்லப்பா கேட்டார். அதை பரிசீலனை செய்வதாக, சபாநாயகர் அப்பாவு உறுதியளித்தார்.