தமிழக வளர்ச்சிக்கு அ.தி.மு.க., ஆட்சியே காரணம்: பழனிசாமி
தமிழக வளர்ச்சிக்கு அ.தி.மு.க., ஆட்சியே காரணம்: பழனிசாமி
ADDED : ஜூலை 29, 2025 04:03 AM

சென்னை: 'தமிழகத்தின் இன்றைய வளர்ச்சிக்கு, அ.தி.மு.க., ஆட்சியே காரணம்' என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கடந்த 7ம் தேதி, கோவையில் நான் துவங்கிய, 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற எழுச்சிப் பயணம், மக்களின் பெரும் ஆதரவுடன் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை, 10 மாவட்டங்களில், 46 சட்டசபை தொகுதிகளில் பயணம் செய்து, 18.5 லட்சம் மக்களை நேரடியாக சந்தித்திருக்கிறேன்.
சென்ற இடங்களில் எல்லாம் என்னை ஆர்வமுடன் சந்தித்த விவசாயிகள், நெசவாளர்கள், ஆசிரியர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள், தொழில் முனைவோர், இளைஞர்கள், மாணவர்கள், வியாபாரிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், தி.மு.க., ஆட்சியில் சந்தித்து வரும் வேதனைகளை எடுத்துரைத்தனர்.
தமிழகம் முழுதும் கருணாநிதிக்கு சிலை வைப்பது, அரசு திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை வைப்பது, மகனை துணை முதல்வராக்கியது தவிர, வேறு எதையும் முதல்வர் ஸ்டாலின் செய்யவில்லை. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. நிர்வாகத் திறமை இல்லாததால், முதல்வர் ஸ்டாலினுக்கு குற்றங்களை கட்டுப் படுத்த தெரியவில்லை.
தி.மு.க.,வினர் ஓட்டு கேட்டு சென்றால், மக்களே அவர்களை விரட்டி அடிப்பர்; அந்த அளவுக்கு தி.மு.க., ஆட்சியின் மீது வெறுப்பில் உள்ளனர்.
தனிநபர் வருமானத்தில் தேசிய அளவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது, அ.தி.மு.க., ஆட்சியின் தொடர்ச்சியே தவிர, தி.மு.க., அரசின் சாதனையல்ல.
அ.தி.மு.க., ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தொலைநோக்கு திட்டங்களால் தான், தமிழகம் இன்று வளர்ச்சி அடைந்துள்ளது.
'தி.மு.க.,வின் உருட்டுகளும் திருட்டுகளும்' என்ற புதிய பிரசாரத் திட்டத்தை துவங்கி இருக்கிறோம். தி.மு.க., ஆட்சியின் அவலங்களை, 'ரிப்போர்ட் கார்டு' ஆக மக்கள் பூர்த்தி செய்து வழங்க உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.