ADDED : ஆக 16, 2025 04:13 AM

மதுரை:'நான்கரை ஆண்டுகள் துணை முதல்வராக இருந்தபோது, பழனிசாமியின் ஆளுமை பற்றி பன்னீருக்கு தெரியவில்லையா' என அ.தி.மு.க., கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை மீண்டும் சேர்ப்பதில்லை என்பதில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உறுதியாக உள்ளார்.
எனவே, 'பழனிசாமி தலைமைப் பண்பு இல்லாதவர்; ஆளுமை இல்லாதவர்; இனியும் தோல்விகளையே சந்திப்பார்' என மிகக் கடுமையாக பன்னீர் செல்வம் விமர்சித்தார்.
அவருக்கு பதிலளிக்கும் விதமாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான உதயகுமார் கூறியதாவது:
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் ஆளுமை பற்றி அறிந்தே, அவரை முதல்வர் வேட்பாளராக பன்னீர்செல்வம் முன்மொழிந்தார்.
அவருடன், நான்கரை ஆண்டுகள் துணை முதல்வராக இருந்தபோது, அவரது ஆளுமை பற்றி தெரியாதா? பழனிசாமியின் பிரசார பயணம் வெற்றி பெற்றதால், காழ்ப்புணர்ச்சியோடு பன்னீர்செல்வம் விமர்சிக்கிறார்; விரக்தியில் பொறாமைப்படுகிறார்.
லோக்சபா தேர்தலில், ஒரு நிமிடம் பன்னீர் செல்வம் யோசித்து இருந்தால் அ.தி.மு.க.,வை எதிர்த்து போட்டியிட்டு இருக்க மாட்டார்.
இந்த அளவுக்கு சோதனைகள், தடைகள், சத்திய சோதனைகளை, அ.தி.மு.க., எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
பன்னீர்செல்வத்தின் கருத்துகள் அனுதாபத்தை தேடும் விதமாகவும், பிரச்னைகளை திசை திருப்பும் விதமாகவும் உள்ளது. தடம் புரண்டு சென்ற அவரது கருத்துகளை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.