எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
ADDED : ஜன 05, 2026 02:26 AM

சென்னை: பணி நிரந்தரம் கோரி, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில், சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடந்த போராட்டத்திற்கு, சங்கத்தின் மாநில தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார்.
மாநில பொதுச்செயலர் சேரலாதன் கூறியதாவது:
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில், 10 ஆண்டிற்கு மேலாக பணியாற்றி வருவோர் நிரந்தரம் செய்யப்படுவர் என, முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.
பணி நிரந்தரம் வழங்கப்பட வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த நான்கு ஆண்டுகளில் பலகட்ட போராட்டங்களை நடத்தி விட்டோம். இருப்பினும், முதல்வர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை.
மேலும், 'எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்களை பணி நிரந்தம் செய்ய முடியாது மற்றும் பணி நிரந்தரம் குறித்து மத்திய அரசே முடிவெடுக்க முடியும்' என, திட்ட இயக்குநர் சீத்தாலட்சுமி தெரிவித்தது அதிர்ச்சியாக உள்ளது.
எனவே, முதல்வர் இனியும் கால நீட்டிப்பு செய்யாமல், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

