ADDED : ஏப் 13, 2025 02:59 AM
சென்னை: 'போக்குவரத்து ஊழியர்களுக்கு புதிய ஊதிய உயர்வை, சட்டசபையில் அறிவிக்க வேண்டும்' என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, ஏ.ஐ.டி.யு.சி., பொதுசெயலர் ஆறுமுகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு, 15வது புதிய ஊதிய உயர்வு குறித்து, பல கட்ட பேச்சு நடத்தியும் ஊதிய உயர்வு அறிவிக்கவில்லை.
எனவே, நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில், ஊதிய உயர்வை அறிவிக்க வேண்டும். இதேபோல, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான ஓய்வுக்கால பலன்களை வழங்க, கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும். பஸ்களை சீராக இயக்க, அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள, 30,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த, சிறப்பு நிதியை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.