மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு: டி.எஸ்.பி.,க்கு பிடிவாரன்ட்
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு: டி.எஸ்.பி.,க்கு பிடிவாரன்ட்
ADDED : பிப் 25, 2026 09:10 PM

மதுரை; சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் டி.எஸ்.பி.,க்கு மதுரை நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது.
மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதா காரிலிருந்த நகை திருடுபோனதாக திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். கோயில் காவலாளியாக இருந்த அஜித்குமாரை 2025ம் ஆண்டு ஜூன் 27ல் போலீசார் விசாரித்தனர். தனிப்படை போலீசார் தாக்கியதில் அவர் இறந்தார்.
இவ்வழக்கை சி.பி.ஐ.,விசாரிக்கிறது. போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன், போலீஸ் வேன் டிரைவர் ராமச்சந்திரன் கைதாகினர்.
மானாமதுரை டி.எஸ்.பி.,சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சிறப்பு எஸ்.ஐ.,சிவக்குமார், ஏட்டு இளையராஜா கூடுதல் எதிரிகளாக குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டனர்.
இவர்கள் பிப்.25 ல் ஆஜராக மதுரை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி பிப்.11 ல் உத்தரவிட்டார். ஆனால் அந்நீதிமன்ற நீதிபதி விடுமுறை என்பதால் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி அசன்முகமது விசாரித்தார். ரமேஷ்குமார், சிவக்குமார், இளையராஜா ஆஜராகினர்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
டி.எஸ்.பி.,சண்முகசுந்தரம் ஆஜராகவில்லை. அவருக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படுகிறது. விசாரணை நாளை (பிப்.26) ஒத்திவைக்கப்படுகிறது என்றார்.

