ADDED : மார் 17, 2024 06:23 AM
சென்னை : தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் அழகிரியின் ஆதரவாளரும், மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவருமான ரஞ்சன்குமாரிடமிருந்து மாவட்ட தலைவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
அழகிரி, மாநில தலைவராக நியமிக்கப்பட்ட பின், மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவராக, அவரது ஆதரவாளர் ரஞ்சன்குமார் நியமிக்கப்பட்டார்.
பின், தமிழக காங்கிரஸ் எஸ்.சி., துறையின் மாநில தலைவராகவும் ரஞ்சன்குமார் இருந்து வருகிறார். அழகிரி மாற்றப்பட்டு, செல்வப்பெருந்தகை மாநில தலைவரானதும், இரட்டை பதவி வகித்து வரும் ரஞ்சன்குமாரிடமிருந்து மாவட்ட தலைவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, செல்வப்பெருந்தகை அறிக்கையில், 'மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவராக இருந்த ரஞ்சன்குமார்,  அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார்.
'அவருக்கு கீழ் பணியாற்றிய மாவட்ட, வட்ட நிர்வாகிகள், முன்னணி அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள்,லோக்சபா தொகுதி ஒருங்கிணைப்பாளர் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்புக்குழு உறுப்பினர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்' என கூறப்பட்டு உள்ளது.

