அனைத்து மொழி கல்வெட்டு தகவல்களை இணையதளம் வாயிலாக இனி அறியலாம்
அனைத்து மொழி கல்வெட்டு தகவல்களை இணையதளம் வாயிலாக இனி அறியலாம்
ADDED : டிச 20, 2025 06:35 AM

- நமது நிருபர் -
அனைத்து மொழிகளின் கல்வெட்டுகளையும், 'டிஜிட்டல்' எனப்படும் மின்னணு வடிவில் மாற்றும் பணி துவங்கி உள்ளது.
நாட்டில் கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டுகளில், 70 சதவீதத்துக்கும் மேலானவை தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றுடன், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளின் கல்வெட்டுகளும், கடந்த 100 ஆண்டுகளாக, மத்திய தொல்லியல் துறையால் கண்டறியப்பட்டுள்ளன.
அவற்றில் உள்ள எழுத்துகள், காகிதத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அவை, மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டியல் பிரிவின், ஊட்டி மற்றும் சென்னை அலுவலகங்களில் பாதுகாக்கப்பட்டன. பின், கர்நாடக மாநிலம் மைசூருக்கு மாற்றப்பட்டன.
இந்நிலையில், 'பாரத் ஸ்ரீ' திட்டத்துக்காக, 2023 மத்திய பட்ஜெட்டில், 1 கோடி, 59 லட்சத்து, 93,664 ரூபாய் ஒதுக்கப்பட்டது.
கல்வெட்டு களஞ்சியம் என்ற கருவூலத்தை உருவாக்கும் திட்டமான, 'பாரத் ஸ்ரீ'யின்படி, மைசூருவில் உள்ள தென்மாநில கல்வெட்டியல் பிரிவில், அதற்கான பணிகள் நேற்று முன்தினம் துவங்கின.
இதுகுறித்து, மத்திய தொல்லியல் துறையின் தென்மண்டல கல்வெட்டியல் பிரிவு இயக்குநர் முனிரத்தினம் கூறியதாவது:
கல்வெட்டுகளில் இருந்து, காகிதத்தில் நகல் எடுக்கப்பட்ட எழுத்துகளை, டிஜிட்டல் மயமாக்கி இணையதளத்தில் பதிவேற்றுவதற்கான பணி துவங்கி உள்ளது.
இதில், 25,000க்கும் மேற்பட்ட தமிழ் கல்வெட்டு நகல்கள் உட்பட, 75,000 கல்வெட்டு எழுத்துகள், 'ஸ்கேன்' செய்யப்படும். அவை, ஒவ்வொரு வாரமும் பதிவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

