ஆக., 22ல் தமிழகம் வருகிறார் அமித் ஷா: பா.ஜ., 'பூத் கமிட்டி' மாநாட்டில் பங்கேற்பு
ஆக., 22ல் தமிழகம் வருகிறார் அமித் ஷா: பா.ஜ., 'பூத் கமிட்டி' மாநாட்டில் பங்கேற்பு
ADDED : ஆக 17, 2025 03:22 AM

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் 22ம் தேதி தமிழகம் வருகிறார். திருநெல்வேலியில் நடைபெறும் பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாட்டில் பங்கேற்கிறார்.
சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்வதற்கான பணிகளை, தமிழக பா.ஜ., துவக்கி உள்ளது. அதன்படி, சட்டசபை தொகுதி வாரியாக பூத் கமிட்டிகளை வலுப்படுத்தி, அதன் நிர்வாகிகளுக்கான மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளது.
தமிழகம் முழுதும் எட்டு இடங்களில், 'பூத் கமிட்டி' நிர்வாகிகள் மாநாட்டை நடத்த, தமிழக பா.ஜ., முடிவு செய்துள்ளது.
முதல் மாநாடு, திருநெல்வேலியில் இன்று நடக்க இருந்தது. இதில், தென் மாவட்டங்களில் உள்ள ஐந்து லோக் சபா தொகுதிகளுக்கு உட்பட்ட, 28 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய, 8,595 பூத் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்க இருந்தனர். இந்த மாநாட்டில், பா.ஜ., மேலிட தலைவர்களும் பங்கேற்க இருந்தனர்.
இந்த நிலையில், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், நாகாலாந்து மாநில கவர்னருமான இல.கணேசன் நேற்று முன்தினம் காலமானார். இதையடுத்து, திருநெல்வேலியில் இன்று நடக்க இருந்த, 'பூத் கமிட்டி' நிர்வாகிகள் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், “நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில், பா.ஜ., கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். ஐந்து நாட்களுக்கு கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்,” என தெரிவித்தார்.
எனவே திருநெல்வேலியில் இன்று நடக்க இருந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு, வரும் 22ம் தேதி, நடைபெறுகிறது. இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் 22ம் தேதி தமிழகம் வருகிறார்.
மேலும், அன்றைய தினம் தமிழக பா.ஜ., சார்பில் திருநெல்வேலியில் நடைபெறும் பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாட்டில், அமித் ஷா பங்கேற்பார் என தகவல் வெளியாகிஉள்ளது.