ADDED : பிப் 19, 2026 01:31 AM
சென்னை: ''அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்ட அம்மா உணவகம் எங்கும் மூடப்படவில்லை,'' என, அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - வேலுமணி: தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்ட திட்டங்களை, அ.தி.மு.க., அரசு நிறுத்தி விட்டதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ஆனால், அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்ட தாலிக்கு தங்கம், அம்மா கிளினிக் போன்ற திட்டங்களை நிறுத்தி விட்டீர்கள்.
அம்மா உணவகங்கள் இப்போது எப்படி உள்ளன என்பது அனைவருக்கும் தெரியும். மூடாமல் அதை மூடி விட்டீர்கள்.
அமைச்சர் நேரு: அம்மா உணவகங்கள், அ.தி.மு.க., ஆட்சியில் எவ்வாறு செயல்பட்டதோ, அதுபோலவே இப்போதும் செயல்படுகின்றன; எங்கும் மூடப்படவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: சென்னை சாந்தோமில், ஜெயலலிதா திறந்து வைத்த அம்மா உணவகம் மூடப்பட்டுள்ளது.
அமைச்சர் நேரு: எந்தவொரு இடத்திலும் அம்மா உணவகம் மூடப்படவில்லை. சாந்தோமில் ஜெயலலிதா திறந்து வைத்த அம்மா உணவகமும் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு விவாதம் நடந்தது.

