ADDED : பிப் 04, 2025 07:04 PM
சென்னை:வடலுார் வள்ளலார் சத்திய ஞானசபையில் மரங்கள் வெட்டப்படுவதற்கு, பா.ம.க., தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
வடலுார் வள்ளலார் சத்திய ஞானசபை பெருவெளியில் உள்ள, 20க்கும் மேற்பட்ட மரங்களை ராட்சத இயந்திரங்களை பயன்படுத்தி, அறநிலையத் துறை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். வரும் 11ம் தேதி தைப்பூச விழா நடக்கவுள்ள நிலையில், அடிப்படை வசதிகளை செய்வதற்காகவே, மரங்கள் பிடுங்கப்படுவதாக கூறப்படுவதை ஏற்க முடியாது.
தைப்பூச நாளில், வடலுாரில் வள்ளலார் ஜோதி தரிசனத்தை காண, 10 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான பக்தர்கள் கூடினாலும், அனைவரும் எந்த சிக்கலும் இடையூறும் இல்லாமல், ஜோதி தரிசனம் காண்பதற்கு வசதியாகதான், 70 ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவு உள்ள பெருவெளியில், எந்த ஆக்கிரமிப்பும் செய்யக்கூடாது என்று, வள்ளலாரே கூறியிருந்தார்.
அதன்படியே இதுவரை பராமரிக்கப்பட்டும் வந்தது. அத்தகைய பெருவெளியை, வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்காக ஆக்கிரமித்துவிட்டு, கூடுதல் வசதிகளை செய்து தருவதாகக் கூறி, மரங்களை அகற்றுவது முரண்பாடுகளின் உச்சம்.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடியதாக, வள்ளலார் கூறியிருக்கிறார். அவரது நிலத்தில் வளர்ந்திருந்த மரங்களை வெட்டி வீழ்த்துவது, வள்ளலாரால் வெறுக்கப்பட்ட உயிர்க் கொலையாகும். வள்ளலாரை மதிக்கும் அரசாக இருந்தால், சத்திய ஞானசபை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.