ஆந்திரா மணல், எம்-சாண்ட்டுக்கு 'கிராக்கி' குறைந்த விலை என்பதால் வாங்க ஆர்வம்
ஆந்திரா மணல், எம்-சாண்ட்டுக்கு 'கிராக்கி' குறைந்த விலை என்பதால் வாங்க ஆர்வம்
ADDED : ஏப் 23, 2025 12:47 AM
சென்னை:தமிழகத்தில், 'எம் - சாண்ட்', கருங்கல் ஜல்லி விலை உயர்வு காரணமாக, ஆந்திராவில் இருந்து வரும் மணல், எம் - சாண்ட், ஜல்லி போன்றவற்றை வாங்கவே, கட்டுமான நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றன.
தமிழகத்தில் குவாரிகள் செயல்படாததால், கடந்த சில மாதங்களாக, ஆற்று மணல் கிடைப்பதில்லை. இதேபோன்று, எம் - சாண்ட், கருங்கல் ஜல்லி கிடைப்பதிலும் தட்டுப்பாடு நிலவுகிறது.
தமிழகத்தில் இருந்து ஆற்று மணல், எம் - சாண்ட், கருங்கல் ஜல்லி போன்றவை, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதாக புகார் கூறப்படும் நிலையில், அதற்கு மாறாக, ஆந்திராவில் இருந்து கட்டுமானப் பொருட்கள் தமிழகத்துக்கு வரத் துவங்கியுள்ளன.
விலை உயர்வு
கருங்கல் குவாரி உரிமையாளர்கள், 'கிரஷர்' உரிமையாளர்கள் சங்கம், தற்போது விலை உயர்வை அறிவித்துள்ளது.
அதன்படி, ஒரு யூனிட் எம் - சாண்ட், 6,000 ரூபாய்; பி - சாண்ட், 7,000 ரூபாய்; கருங்கல் ஜல்லி, 5,000 ரூபாய் என, விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால், கட்டுமான செலவு உயர்வதுடன், வீட்டின் விலையும் உயரக்கூடும் என்று கூறப்படுகிறது.
மேலும், ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட பணிகளை முடிப்பதும், விலை உயர்வால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆந்திராவில் திருப்பதி, நெல்லுார் மாவட்டங்களில் இருந்து, ஆற்று மணல், எம் - சாண்ட், கருங்கல் ஜல்லி போன்றவை, குறைந்த விலைக்கு வாங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் தற்போதுள்ள விலையை விட, குறைந்த விலைக்கு ஆந்திராவில், மணல், எம் - சாண்ட் போன்ற பொருட்களை வாங்க முடிகிறது என, கட்டுமானத் துறையினர் கூறுகின்றனர்.
விலை நிலவரம்
தமிழகத்தில், ஒரு யூனிட் ஆற்று மணலின் குறைந்தபட்ச விலை, 14,000 ரூபாயாக உள்ள நிலையில், ஆந்திராவில், 8,000 ரூபாய்க்கு மணல் கிடைக்கிறது.
இதேபோன்று தமிழகத்தில், 6,000 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு யூனிட் எம் - சாண்ட், ஆந்திராவில், 1,400 ரூபாய்க்கு கிடைக்கிறது. தமிழகத்தில், 5,000 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு யூனிட் கருங்கல் ஜல்லி, ஆந்திராவில், 1,200 ரூபாய்க்கு கிடைப்பதாக கட்டுமானத் துறையினர் கூறுகின்றனர்.
இதில், மொத்தமாக, 10 யூனிட் ஒரு லோடு என்ற அடிப்படையில் வாங்கும் போது போக்குவரத்துக்காக, 5,000 ரூபாய் கூடுதல் செலவாகிறது.
தமிழகத்தில் ஒரு யூனிட் என்பது, 100 கன அடி என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இது, ஆந்திராவில் ஒரு டன் என, கணக்கிடப்படுகிறது.