ஒரு மாதம் கோடை விடுமுறை வேண்டும்: அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
ஒரு மாதம் கோடை விடுமுறை வேண்டும்: அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
ADDED : மே 03, 2025 01:20 AM

சென்னை: ஒரு மாதம் கோடை விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி மைய ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள், தமிழகம் முழுதும் நேற்று, மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை தரமணியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, அச்சங்கத்தின் மாநில தலைவர் ரத்தினமாலா தலைமை வகித்தார்.
போராட்டம் குறித்து, சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
தற்போது, அங்கன்வாடி மையங்களில், 7,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உட்பட, 27,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், ஒவ்வொரு ஆசிரியரும், ஊழியரும் கூடுதல் மையங்களை கவனிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், குழந்தைகளுக்கான கல்வி பாதிக்கிறது. மேலும், பல மையங்களில் சமையலரே, குழந்தைகளுக்கு ஆசிரியராகவும் உள்ளனர். இதுகுறித்து, அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை பலமுறை நேரில் சந்தித்து பேசியும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனையாக உள்ளது.
அங்கன்வாடி மையங்களில், பயனாளிகள் சத்துமாவு பெறுவதை உறுதி செய்யும் வகையில், அரசு, 'போஷன் டிராக்கர்' என்ற செயலியை, கடந்த மாதம் அறிமுகம் செய்தது. 70 சதவீதத்திற்கு மேற்பட்ட மையங்கள், கிராமப்புறங்களில் உள்ளன. அங்கு இணைய வசதி இல்லாததால், இந்த செயலியை பயன்படுத்துவது சவாலாக உள்ளது. இதனால், தினசரி மூன்று பயனாளிகளுக்கு கூட, எங்களால் சத்துமாவு வழங்க முடிவதில்லை. எனவே, அரசு இம்முறையை உடனடியாக கைவிட வேண்டும்.
அதேபோல, கோடை வெயில் காலத்தில், அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் வகையில், ஒரு மாதம் விடுமுறை வழங்க வேண்டும். எங்களது நியாயமான கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை, எங்களது போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.