'ஏஞ்சல்' திரைப்பட விவகாரம் துணை முதல்வருக்கு 'நோட்டீஸ்'
'ஏஞ்சல்' திரைப்பட விவகாரம் துணை முதல்வருக்கு 'நோட்டீஸ்'
ADDED : பிப் 18, 2025 05:30 AM
சென்னை: ஏஞ்சல் படத்தின் படப்பிடிப்பை முடிக்காததால், 25 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி, பட தயாரிப்பாளர் ராம சரவணன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு, துணை முதல்வர் உதயநிதி பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அமைந்தகரையை சேர்ந்த, ஓ.எஸ்.டி., பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் ராமசரவணன் தாக்கல் செய்த மனு:
இயக்குனர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், ஏஞ்சல் என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த, 2018ல் படப்பிடிப்பு துவங்கி, 80 சதவீதம் நிறைவடைந்து விட்டது. படத்தின் நாயகனாக உதயநிதியும், நாயகிகளாக நடிகையர் ஆனந்தி, பாயல் ராஜ்புத் மற்றும் நடிகர் யோகிபாபு நடித்துள்ளனர்.
இன்னும், 20 சதவீத படப்பிடிப்பு நடத்த வேண்டிய சூழலில், ஏஞ்சல் படத்தை முடிக்காமல், மாமன்னன் படத்தில் உதயநிதி நடித்துள்ளார். அந்த படம், கடைசி படம் என்றும், உதயநிதி கூறியுள்ளார். ஏஞ்சல் படத்துக்காக, 13 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
ஒப்பந்தப்படி, இன்னும் எட்டு நாட்கள் 'கால்ஷீட்' தராமல் புறக்கணித்து வரும் உதயநிதி, படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டும். இழப்பீடாக, 25 கோடி ரூபாய் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த, நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன், 'கால வரம்பை கடந்து, இந்த வழக்கு தொடரப்பட்டது என்பதை, உதயநிதி தரப்பு வாதங்கள் வாயிலாக அறிய முடிகிறது' எனக்கூறி, ஓ.எஸ்.டி., பிலிம்ஸ் நிறுவன உரிமையாளரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ராம சரவணன் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு, நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இம்மனு தொடர்பாக, துணை முதல்வர் உதயநிதி, பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 18ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

