உயர்நீதிமன்ற வளாகத்தில் சுற்றித்திரிந்த 27 தெருநாய்களை பிடித்த ஊழியர்கள்; விலங்கின ஆர்வலர்கள் போராட்டம்
உயர்நீதிமன்ற வளாகத்தில் சுற்றித்திரிந்த 27 தெருநாய்களை பிடித்த ஊழியர்கள்; விலங்கின ஆர்வலர்கள் போராட்டம்
ADDED : டிச 31, 2025 08:06 PM

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், தெரு நாய்களை பிடிக்கும் பணியின்போது, இரண்டு நாய்கள் உயிரிழந்தன. இதை அறிந்த விலங்குகள் நல ஆர்வலர்கள், மாநகராட்சி ஊழியர்களை கண்டித்து, நீதிமன்ற நுழைவாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிந்தன. அவற்றில் பல, நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தன. இதனால், வழக்கறிஞர்கள், ஊழியர்கள் மட்டுமின்றி, வழக்கு தொடர்பாக வரும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இது குறித்து, உயர் நீதிமன்ற பதிவாளர் மாநகராட்சிக்கு புகார் தெரிவித்தார். மாநகராட்சி கமிஷனர் உத்தரவின்படி, இன்று அதிகாலை 3:00 மணிக்கு, ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த மாநகராட்சி ஊழியர்கள், ஆறு மாத குட்டி நாய் உட்பட, 27 நாய்களை பிடித்துள்ளனர்.
இதில், இரண்டு நாய்கள் இறந்தன. இந்த தகவலை அறிந்த விலங்குகள் நல ஆர்வலர்கள், 30க்கும் மேற்பட்டோர், உயர் நீதிமன்றத்தின் எட்டாவது நுழைவாயில் முன் குவிந்தனர். ஊழியர்கள் முறைப்படி நாய்களை பிடிக்காததால், நாய்கள் இறந்ததாக கண்டனம் தெரிவித்து, போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்து வந்த எஸ்பிளனேடு போலீசார், அவர்களிடம் சமரசம் பேசி கலைந்து போக செய்தனர். இதையடுத்து, பிடித்த நாய்களை கூண்டில் அடைத்து, புளியந்தோப்பில் உள்ள நாய்கள் காப்பகத்திற்கு, மாநகராட்சி ஊழியர்கள் எடுத்து சென்றனர்.
எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
தெரு நாய்களை பிடிப்பதற்கு, நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. முறைப்படி காப்பகம் அமைத்து பராமரிக்க வேண்டும். நாய்களைப் பிடிப்பதற்கான விதிமுறையை, ஊழியர்கள் முறையாக பின்பற்ற வேண்டும். ஏற்கனவே காப்பகத்தில் உள்ள 150 நாய்களுடன், இவற்றை ஒன்றாக அடைக்கத் தான் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். - மோனிகா விலங்குகள் நல ஆர்வலர்

