அங்கித் திவாரி ஜாமின் மனு; விசாரணை வேறு நீதிபதிக்கு மாற்றம் உயர்நீதிமன்றம் உத்தரவு
அங்கித் திவாரி ஜாமின் மனு; விசாரணை வேறு நீதிபதிக்கு மாற்றம் உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : மார் 12, 2024 11:05 PM
மதுரை : திண்டுக்கல் அரசு டாக்டரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் மனு மீதான விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் 2018ல் வழக்கு பதிந்தனர். மதுரை அமலாக்கத்துறை இயக்குனரக தென் மண்டல துணை இயக்குனர் அலுவலக அதிகாரி அங்கித்திவாரி அலைபேசியில், 'சொத்து குவிப்பு தொடர்பாக உங்களுக்கு எதிராக புகார் வந்துள்ளது. விசாரிக்க வேண்டும்,' என சுரேஷ்பாபுவிடம் தெரிவித்தார்.
வழக்கை முடிக்க அங்கித்திவாரி ரூ.50 லட்சம் பேரம் பேசினார்.
சுரேஷ்பாபுவிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றதாக அங்கித் திவாரியை 2023 டிச.,1ல் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அவர், 'கைதாகி 60 நாட்களுக்கு மேலாகிறது.
போலீசார் திண்டுக்கல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. அந்நீதிமன்றம் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. அதை ரத்து செய்து ஜாமின் அனுமதிக்க வேண்டும்,' என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
நீதிபதி விவேக்குமார் சிங் விசாரித்தார்.
தமிழக அரசு தரப்பு: மனுதாரரின் ஜாமின் மனுவை ஏற்கனவே உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுதாரர் மனு செய்துள்ளார். இங்கும் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஒரே நேரத்தில் ஒரே நிவாரணத்திற்கு வெவ்வேறு நீதிமன்றங்களில் ஜாமின் மனு தாக்கல் செய்வது ஏற்புடையதல்ல. ஜாமின் அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு ஆட்சேபம் தெரிவித்தது.
நீதிபதி: இம்மனுவை விசாரிக்க விரும்பவில்லை. வேறு நீதிபதியின் விசாரணைக்கு மாற்றப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.

