ADDED : மார் 18, 2025 09:29 PM
சென்னை:அமைச்சர் அன்பரசனுக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அன்பரசன் பொதுக்கூட்டத்தில் பேசும் வீடியோ பதிவை, அண்ணாமலை வெளியிட்டுள்ளார். அதில், 'ஹிந்தி படித்தவர்கள் எங்கு உள்ளனர். எங்கள் வீட்டில் மாடு மேய்கின்றனர். பானிபூரி விற்கின்றனர், ஹிந்தி படித்தால் நாமும், வட நாட்டிற்கு சென்று, பானிபூரி விற்க வேண்டும்' என, அன்பரசன் பேசுகிறார்.
இதற்கு, அண்ணாமலை விடுத்த அறிக்கை:
வட மாநில சகோதரர்களை இழிவுப்படுத்தி, தி.மு.க., அமைச்சர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். அமைச்சர் அன்பரசன், மிகவும் மோசமான தமிழில் புலமை கொண்டவர். கட்டுப்பாடற்ற மது விற்பனை, போதை பொருட்கள் எளிதில் கிடைப்பது உள்ளிட்ட காரணங்களால், தமிழக இளைஞர்களை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி உள்ளனர்.
எனவே, மாநில தொழிலாளர் பற்றாக்குறையை, வட மாநில தொழிலாளர்கள் தான் பூர்த்தி செய்கின்றனர். அவர்களை இழிவுப்படுத்தியதற்கு அமைச்சர் அன்பசரன் வெட்கப்பட வேண்டும். தேசிய கல்விக் கொள்கை, அனைத்து மொழிகளையும் ஊக்குவிக்கிறது. இதை, தமிழக மக்கள் உணர்ந்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.