விவசாயிகளுக்கான நஷ்ட ஈட்டை உடனே தர அண்ணாமலை வலியுறுத்தல்
விவசாயிகளுக்கான நஷ்ட ஈட்டை உடனே தர அண்ணாமலை வலியுறுத்தல்
ADDED : பிப் 15, 2024 10:58 PM
சென்னை:'விவசாயிகளுக்கான நஷ்டஈடை, தமிழக அரசு உடனே வழங்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
காவிரி நதியில் குறித்த நேரத்தில், தண்ணீர் திறக்கப்படாததால், இந்தாண்டு டெல்டா பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி, 40 சதவீதம் குறைந்துள்ளதாக செய்தி வந்துள்ளது. முழுக்க முழுக்க தி.மு.க.,வின் கையாலாகாத்தனமே இதற்கு காரணம்.
கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணிக்காக, விவசாயிகள் பற்றியோ, காவிரி தண்ணீர் பற்றியோ, எந்த கவலையும் இன்றி, சரியான நேரத்தில் தண்ணீர் பெற்று கொடுக்காமல், தமிழக விவசாயிகளை வஞ்சித்திருக்கிறது தி.மு.க., அரசு.
கர்நாடகா மாநிலத்தில், காங்கிரஸ் ஆட்சி அமைந்த உடனேயே, போதிய அளவு தண்ணீர் இருந்தும், தமிழகத்திற்கு சேர வேண்டிய தண்ணீரை திறந்து விட மறுத்து வந்தது. அதை எதிர்க்க வேண்டிய தி.மு.க., எந்த குரலையும் எழுப்பவில்லை.
இன்று, டெல்டாவில், 40 சதவீதம் குறைவான மகசூலால் பாதிக்கப்பட்டதற்கு, இந்த இரு மாநில தி.மு.க., - காங்கிரஸ் அரசுகளே முழுப்பொறுப்பு. போதிய மகசூல் இல்லாமல் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் விவசாயிகளுக்கு, அதற்கான நஷ்டஈட்டை, தமிழக அரசு உடனே வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.