பல்லாவரம் குடிநீரில் கழிவு நீர் கலப்பு அன்பரசனுக்கு அண்ணமாலை கேள்வி
பல்லாவரம் குடிநீரில் கழிவு நீர் கலப்பு அன்பரசனுக்கு அண்ணமாலை கேள்வி
ADDED : டிச 13, 2024 08:49 PM
சென்னை:தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:
இம்மாதம், 5ம் தேதி சென்னை பல்லாவரத்தில், குடிநீரில் கழிவு நீர் கலந்ததால், மூன்று பேர் உயிரிழந்தது, 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில், 'குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை, பொது மக்கள் தவறினால் தான் பாதிப்பு ஏற்பட்டது' என அமைச்சர் அன்பரசன், மக்கள் மீது குற்றம் சுமத்தினார்.
அந்த பகுதியில், அன்றைய நாளில் வழங்கப்பட்ட குடிநீரை பரிசோதனைக்கு அனுப்பி, அதன் முடிவுகள் கிடைத்துள்ளன. குடிநீரில், 'கோலிபார்ம், ஈ கோலி' ஆகிய பாக்டீரியாக்கள் இருக்கக்கூடாது என்பது, சென்னை குடிநீர் தர கட்டுப்பாடுகளில் ஒன்று. ஆனால், பல்லாவரம் பகுதியில் வழங்கப்பட்ட குடிநீரில், இந்த இரு பாக்டீரியாக்களும் இருப்பது, சோதனை முடிவில் வெளிப்பட்டுள்ளது.
வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பொது மக்களுக்கு குடிநீர் வழங்கும் போது, அடிப்படை சோதனைகளை கூட செய்யாமல், தங்கள் நிர்வாக தோல்வியை, தவறுகளை மறைத்து, அதிகார திமிரின் உச்சத்தில், மக்களை குற்றவாளியாக்க முயன்றார் அமைச்சர் அன்பரசன். அவர், குடிநீரில் கழிவு நீர் கலந்ததன் காரணமாக பறிபோன மூன்று உயிர்களுக்கு, என்ன பதில் கூறுவார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

