பா.ஜ.,வை எதிர்க்கட்சியாக காட்ட அண்ணாமலை முயற்சி: திருமாவளவன்
பா.ஜ.,வை எதிர்க்கட்சியாக காட்ட அண்ணாமலை முயற்சி: திருமாவளவன்
ADDED : டிச 26, 2024 05:28 PM

கோவை: '' தமிழகத்தில் அ.தி.மு.க., அல்ல; பா.ஜ., தான் எதிர்க்கட்சி என காட்ட அண்ணாமலை முயற்சி செய்கிறார்,'' என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் அரசு மீது குற்றம்சாட்டுவது ஏற்புடையது அல்ல எனவும் கூறியுள்ளார்.
தண்டனை
கோவை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: அண்ணா பல்கலை.,யில் மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு உள்ளது மிகுந்த வேதனைக்குரியது. இதில் தொடர்புடைய குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டது ஆறுதல் அளிக்கிறது. அக்குற்ற செயலில் தொடர்புடையவர்கள் வேறு யார் இருந்தாலும் அனைவருமே கைது செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு உடனடியாக ஜாமின் வழங்காமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சிறைக்குள் வைத்து இருந்து விசாரணை நடத்த வேண்டும். அவர்களுக்கு உரிய தண்டனையை உரிய காலத்தில் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
ஆதாய அரசியல்
அண்ணாமலை பரபரப்பான அரசியல் செய்ய விரும்புகிறார். தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க., அல்ல பா.ஜ.,தான் எதிர்க்கட்சி என்று காட்ட பெரிதும் முயற்சிக்கிறார். ஆகவே ஆளுங்கட்சி மீது அவ்வபோது குற்றச்சாட்டுகளை அடுக்கினால் தான் ஒரு எதிர்க்கட்சியாக செயல்பட முடியும். எதிர்க்கட்சி தலைவராக காட்டிக் கொள்ள முடியும் என அவர் நம்புவதாக தெரிகிறது. கைது செய்யப்பட்ட ஞானசேகரன், அரசியல் கட்சி தலைவர்களோடு புகைப்படம் எடுத்திருக்கிறார். அதற்கு தி.மு.க., பொறுப்பேற்க வேண்டும் எனச் சொல்வது அப்பட்டமான ஒரு அரசியல். ஆதாய அரசியல். அவர் கைது செய்யப்படாமல் இருந்தால், ஒரு வேளை இந்த காரணத்தினால் தான் கைது செய்யவில்லை என குற்றம்சாட்டலாம். ஆனால், உடனடியாக கைது செய்யப்பட்ட நிலையில் அரசின் மீது குற்றம் சுமத்துவது ஏற்புடையது அல்ல.
அதிர்ச்சி
லண்டன் சென்று விட்டு வந்த பிறகு அண்ணாமலைக்கு என்ன ஆனது என தெரியவில்லைசாட்டையால் அடிக்கும் போராட்டம் என்ற முடிவை எடுப்பது வருத்தமளிக்கிறது. தன்னைத்தானே வருத்தக்கொள்ளும் அஹிம்சை வழிபோராட்டத்தை காந்தியடிகள் போல கையில் எடுக்கிறாரா என தெரியவில்லை. காந்தி கூட இந்தவகை போராட்டம் அறிவிக்கவில்லை. உண்ணாவிரத போராட்டம் சரி. தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கெள்வது அதிர்ச்சியாக இருக்கிறது. அவரது போராட்ட அறிவிப்புகள் நகைப்புக்குரியவையாக மாறிவிடக்கூடாது.
கண்டனம்
மாணவியின் விவரங்கள் வெளியாகி இருக்கக்கூடாது. வெளியானது ஏற்புடையது அல்ல. கண்டனத்திற்க்குரியது. காரணமானவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். எப்.ஐ.ஆர்., வெளியிட்டதற்கு போலீஸ் அதிகாரி பொறுப்பு ஏற்க வேண்டும்.
நாங்கள் யாரையும் மிரட்டுகிற நிலையில் இல்லை. எங்களை யாரும் மிரட்டுகிற நிலையிலும் நாங்கள் இல்லை. இவ்வாறு திருமாளவன் கூறினார்.

