ADDED : பிப் 23, 2024 02:39 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகா காவாகுளத்தை சேர்ந்தவர் அம்மாசி. இவர், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் இரண்டாம் நிலை போலீஸ்காரராக பணிபுரிகிறார்.
இவர், காவாகுளத்தில் மனைவி பிரதீபா பெயரில் உள்ள வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு சிக்கல் மின் வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் உதவி மின்பொறியாளர் மலைச்சாமி 49, என்பவரை அணுகினார்.
அவர், 'மின் இணைப்புக்கு, 12,000 ரூபாய் செலவாகும். ஆன்லைன் பதிவு கட்டணம், 5,192 ரூபாய் போக, மீதப்பணம் எனக்கு லஞ்சமாக வேண்டும்' என, கேட்டுள்ளார்.
தர விரும்பாத அம்மாசி, ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் குமரேசனிடம் புகார் செய்தார். நேற்று மாலை, சிக்கல் மின்வாரிய அலுவலகத்தில் மலைச்சாமியிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை அம்மாசி கொடுத்த போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் மலைச்சாமியை கைது செய்தனர்.