கிருஷ்ணாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது வழங்க தடை விதித்ததை எதிர்த்து 'அப்பீல்'
கிருஷ்ணாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது வழங்க தடை விதித்ததை எதிர்த்து 'அப்பீல்'
ADDED : டிச 07, 2024 02:25 AM
சென்னை: சங்கீத கலாநிதி விருதை, மறைந்த கர்நாடக இசை பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில், பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க தடை விதித்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. விசாரணையை வரும் 9ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
அவதுாறு கருத்து
இசை உலகில் பிரபலமானவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி; 2004ல் மறைந்தார். இவரது பேரன் சீனிவாசன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
என் பாட்டியின் மறைவுக்குப் பின், அவரது நினைவை போற்றும் வகையில், 2005ம் ஆண்டு முதல், மியூசிக் அகடமியும், ஆங்கில நாளிதழும் இணைந்து, 'சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது' என்ற பெயரில், விருது வழங்கி வருகின்றன.
பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு, இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பாடகர் டி.எம்.கிருஷ்ணா, என் பாட்டி எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு எதிராக அவதுாறு கருத்துகளை பரப்பியவர். அவருக்கு விருது வழங்குவது அதிர்ச்சி அளிக்கிறது.
எனவே, டிசம்பரில் நடக்கும் ஆண்டு விழாவில், எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த ஆண்டுக்கான எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருதை, பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க, இடைக்கால தடை விதித்தார்.
விசாரணை
அதேநேரத்தில், எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரை பயன்படுத்தாமல், விருதை வழங்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மியூசிக் அகாடமி தரப்பில் தாக்கல் செய்த மனுவில், 'எம்.எஸ்.சுப்புலட்சுமியின் உயிலில் குறிப்பிடப்பட்டிருந்த பயனாளிகளில், சீனிவாசனும் ஒருவர். மற்றவர்களின் பிரதிநிதியாக வழக்கு தொடர அவருக்கு உரிமையில்லை. தனிப்பட்ட முறையில் சீனிவாசன் பாதிக்கப்படவில்லை.
'எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்க, உயிலில் எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இவற்றை எல்லாம் தனி நீதிபதி பரிசீலிக்கவில்லை' என்று கூறப்பட்டுள்ளது.
மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், தனபால் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையை, வரும் 9ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.