ADDED : ஜன 25, 2024 01:12 AM

கோவை:கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சியில், தொகுதி மேம்பாட்டு நிதியில் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக, தொகுதி எம்.எல்.ஏ.,வான, அ.தி.மு.க.,வை சேர்ந்த செல்வராஜ் மற்றும் கவுன்சிலர்கள் நேற்று முன்தினம் நகராட்சி கமிஷனர் அமுதாவை, சந்தித்து பேசி கொண்டிருந்தனர்.
அப்போது, தி.மு.க.,வை சேர்ந்த நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வீன், துணை தலைவர் அருள்வடிவு மற்றும் தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளிட்டோர், கமிஷனர் அறைக்குள் நுழைந்தனர்.
அதிர்ச்சி அடைந்த எம்.எல்.ஏ., இதுதொடர்பாக கேள்வி எழுப்பியதும், அ.தி.மு.க., - தி.மு.க.,வினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. நகராட்சி கமிஷனர் அமுதா, அழுது கொண்டே அறையை விட்டு வெளியேறினார்.
இதுதொடர்பாக, மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் அமுதா புகார் கொடுத்தார். எம்.எல்.ஏ., செல்வராஜ், கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஒன்பது பேர் மீது, பெண்ணை துன்புறுத்துதல் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு பதிந்தனர்.
இந்நிலையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜ், அருண்குமார் ஆகியோர் நேற்று, கோவை கலெக்டர் கிராந்திகுமாரை சந்தித்து, 'எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கவுன்சிலர்கள் மீது தொடரப்பட்டுள்ள பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என மனு கொடுத்தனர்.